கூட்டணி சிதறல்..தடுமாறும் காங்கிரஸ்-வெங்கையா
சென்னை: கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக கழன்று போய் வருவதால் காங்கிரஸ் கட்சி தட்டுத் தடுமாறுகிறது என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் வெங்கையா நாயுடு.
சென்னை வந்த வெங்கையா நாயுடு அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முகாம் கலகலத்துக் கொண்டிருக்கிறது. அங்கிருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகின்றன.
திமுக, தேசியவாத காங்கிரஸ் தவிர வேறு பெரிய கட்சி அங்கு இல்லை. தேர்தலுக்குப் பின்னர் தேசியவாத காங்கிரஸும் கூட கேம்ப் மாறி விடும்.
கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் அரவணைத்து நடக்காததே இதற்கு முக்கிய காரணம். கூட்டணிக் கட்சிகள் வெளியேறுவதால் காங்கிரஸ் தட்டுத் தடுமாறிப் போய் நிற்கிறது.
இதேபோல 3வது அணியும் திசை தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது. அந்த அணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் எதிரும் புதிருமாக நிற்கின்றன. அவர்களுக்கு என்று தெளிவான கொள்கை கிடையாது, பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லவும் முடியாது.
3 முறை தோல்வி அடைந்து இப்போது நான்காவது முறையாக இந்த 3வது அணியை உருவாக்கியுள்ளனர். இந்த அணி தேர்தலுக்கு முன்பாகவே கரைந்து காணாமல் போய் விடும்.
தமிழகத்தில் கடைசி கட்டமாகத்தான் தேர்தல் நடக்கிறது. அங்கு கூட்டணிகளை இறுதி செய்ய அவகாசம் உள்ளது. எனவே பாஜகவும் தனது அணியை இறுதி செய்ய அவசரம் காட்டவில்லை.
இலங்கைப் பிரச்சினை நிச்சயம் தமிழக லோக்பா தேர்தலில் எதிரொலிக்கும். பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கைப் பிரச்சினைக்கு அந்நாட்டு அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தீர்வு காண முயறசிப்போம் என்றார் வெங்கையா.