மதிமுகவை அழிக்க கருணாநிதி முயற்சி-வைகோ
தேனி: ரைவில் நாங்கள் தான் உண்மையான திமுக என்பதை உணர்த்துவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுகவிலிருந்து அதன் அவைத் தலைவர் மு.கண்ணப்பன், தேனி மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் அடுத்தடுத்து விலகியுள்ள நிலையில் தேனியில் மதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் தொலைபேசி மூலம் வைகோ பேசுகையில்,
முதல்வர் கருணாநிதி மதிமுகவை அழிக்க முயற்சி செய்கிறார். மு.க.ஸ்டாலின் மூலம் கண்ணப்பனை அழைத்து மருத்துவமனையில் வந்து தன்னை சந்திக்க ஏற்பாடு செய்தார்.
கண்ணப்பன் எப்படிப்பட்டவர் என்பதை கூறுகிறேன். திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ வீர.இளவரசன் 3 நாட்களாக மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அப்போது கண்ணப்பனை பார்க்க அவர் ஆவலுடன் இருந்தார். நானும் அழைத்தேன். ஆனால் அவர் வரவேயில்லை. வீர.இளவரசன் இறந்த பிறகும் அவரது வீட்டுக்கு துக்கம் விசாரிக்க கூட செல்லாதவர் தான் இந்த கண்ணப்பன்.
கம்பம் ராமகிருஷ்ணனின் அண்ணன் மகனை தேனி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிப்போம் என்று கருணாநிதி கூறியதை நம்பி கண்ணப்பன் மூலமாக அவர் திமுகவில் இணைந்து உள்ளார். அவர்கள் இருவரும் கருணாநிதியின் மிரட்டலுக்கு அடிபணிந்து விட்டனர்.
கம்பம் ராமகிருஷ்ணனை தேனி மாவட்டச் செயலாளர் ஆக்கியதுடன் எம்எல்ஏவாகவும் ஆக்கி அழகு பார்த்தவன் நான். அவர் சென்றதை பற்றி நான் துளியும் கவலைப்படவில்லை.
சட்டசபையில் திமுக பற்றி கண்ணப்பனும், கம்பம் ராமகிருஷ்ணனும் ஒரு போதும் விமர்சித்ததில்லை. சென்ற இடத்திலாவது அவர்கள் நன்றாக இருக்கட்டும். என்னை குற்றம் சாட்டி கம்பம் ராமகிருஷ்ணனின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் சந்தோஷம் தான்.
மதிமுக மறுபடியும் திமுக ஆகிறது என்று கருணாநிதி விமர்சித்துள்ளார். ஆம் உண்மை தான். விரைவில் நாங்கள் தான் உண்மையான திமுக என்பதை உணர்த்துவோம் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications