வன்னி: '1.90 லட்சம் தமிழர்கள் தவிப்பு'- ஐ.நா.
வாஷிங்டன்: இலங்கையில் யுத்த பகுதியில் 1.9 லட்சம் தமிழர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். குண்டுவீச்சில் தினமும் பலியாகும் தமிழர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ராஜபக்சேவின் இனப்படுகொலை அரசு நாள் தோறும் 100க்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.
இதை எதிர்த்து தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் தமிழற்கள் பெருமளவில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்தி உலக நாடுகளின் கவனத்தை இலங்கையின் பக்கம் திருப்பி வருகின்றனர்.
போர் நிறுத்தம் அறிவித்து யுத்தப்பகுதியில் சிக்கியிருப்பவர்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதை இலங்கை காதில் போட்டுக் கொள்வதாக தெரியவில்லை. இந்திய அரசு முழு ஆதரவுடன் இருப்பதால் யாரைப் பற்றியும் இலங்கை கவலைப்படுவதில்லை.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம்...
இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று இரவு தனிப்பட்ட முறையில் கூடி இலங்கை விவகாரம் குறித்து விவாதித்தது. முதலில் இந்த விவாதத்திற்கு ரஷ்யா, சீனா ஆகியவை எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இருப்பினும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பிற உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐநா மனித விவகார மற்றும் அவசரகால சேவை அமைப்பின் இணை செயலாளர் ஜான் ஹோம்ஸ், கூட்டத்தில் இலங்கை நிலை குறித்து விவரித்தார்.
கூட்டத்தில் தனது ஆய்வு அறிக்கையையும் சமர்ப்பித்தார் ஹோம்ஸ்.
கூட்டத்தில் ஹோம்ஸ் கூறுகையில், ஈழத்தில் யுத்தப் பகுதியில் 1.5 லட்சம் முதல் 1.9 லட்சம் தமிழர்கள் சிக்கியுள்ளார்கள். இந்த பகுதியில் இருந்து தப்பிக்க முடியாமல் தினமும் 100க்கணக்கான அப்பாவி தமிழர்கள் இறக்கிறார்கள்.
ஈழத்தில் ஒவ்வொரு நாளும் மரணம் அடையும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாகி உள்ளது. இதனால் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும்.
கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பலியான அப்பாவி தமிழர்களின் எண்ணிக்கை 2,683 எனவும், காயமடைந்தவர்கள் 7,241 என்றார்.
ஐநாவுக்கான அமெரிக்க தூதர் ரோஸ்மேரி டிகாலோ கூறுகையில், இலங்கை அரசு அப்பாவி தமிழர்கள் இருக்கும் இடங்களில் தொடர்ந்து குண்டுவீசி வருவது வருத்தம் அளிக்கிறது. ராணுவம் மருத்துவமனைக்கு அருகிலும், குடியிருப்புகளுக்கு அருகிலும் குண்டுவீசி வருகிறது. பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது வேதனை தருகிறது.
இலங்கை அரசு தமிழர்கள் விவகாரத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றார்.
இந்த விவாதம் குறித்து ஐ.நா.வுக்கான இலங்கை தூதர் பலிஹக்கரா பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகள் ஒத்துழைப்பு கொடுத்தால், போரை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என எனது அரசுக்கு நான் பரிந்துரைப்பேன்.
ஆனால் போர் நிறுத்தம் என்பது இப்போது பிரச்சினை இல்லை. விடுதலைப் புலிகள் தங்களது கட்டுப்பாட்டில் பிடித்து வைத்துள்ள மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டும். அப்படிச் செய்ய முன்வந்தால் அதை அனுமதிக்கலாம் என அரசுக்கு நானே வலியுறுத்திக் கோரிக்கை விடுப்பேன் என்றார்.