சத்யம் பங்கு ஏலம்: விலகியது ஸ்பைஸ் குழுமம்!
சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் பெரும் மோசடியால் வீழ்ச்சியடைந்த சத்யம் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த தகுதியான முதலீட்டாளர்களைத் தேடும் முயற்சியில் உள்ளது, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சத்யம் இயக்குநர்கள் குழு.
சில தினங்களுக்கு முன்பு, சத்யம் நிறுவனத்தின் 51 சதவிகிதப் பங்குகளை ஏலமுறையில் விற்க முடிவு செய்த இந்த நிறுவனம், அதற்கான முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றது.
எல் அண்டு டி, ஸ்பைஸ், ஐகேட்ஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் இதில் போட்டியிட்டன.
ஏலத்தில் பங்கேற்கத் தகுதிபடைத்த நிறுவனங்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவதாகச் சொன்ன சத்யம் இயக்குநர்கள், இன்னும் தாமதப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சத்யம் நிறுவன பங்குகள் விற்பனை நடைமுறையில் வெளிப்படையான அணுகுமுறையோ, நேர்மையான நடைமுறைகளோ பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டிய ஸ்பைஸ் நிறுவனம், அந்த ஏலத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
நாங்கள் சத்யம் நிறுவன இயக்குநர் குழுவிடம் பலமுறை இதுகுறித்து விளக்கம் கேட்டோம். ஆனால், அவர்களின் பதில் திருப்தியாக இல்லை என ஸ்பைஸ் தெரிவித்துள்ளது.
ஸ்பைஸ் செயல் இயக்குநர் ப்ரீத்தி மோடி இதுகுறித்துக் கூறுகையில், "ஏற்கெனவே முடிவு செய்த பட்டியலில் ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனமாக ஸ்பைஸும் இருந்துள்ளது. ஆனால் இப்போது இரண்டாவது பட்டியல் தயாரிப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏதோ மர்மம் அடங்கியுள்ளது. இதை ஒப்புக் கொள்ள முடியாது. ஏலத்தில் கலந்து கொள்ளவிருக்கும் நிறுவனங்கள் பெயர் அடங்கிய பட்டியலை சத்யம் உடனடியாக வெளியிட வேண்டும்", என்றார்.
இனிமேலும் இந்த ஏலத்தில் பங்கேற்பது தமக்கு பாதுகாப்பானதில்லை என்று தங்கள் இயக்குநர் குழு கருதுவதால் சத்யம் ஏலத்திலிருந்து விலகிக்கொள்வதாக ஸ்பைஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கக் கடிதத்தையும் அதிகாரப்பூர்வமாக நேற்று அனுப்பியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது சத்யம் இயக்குநர் குழு.