மதுரையி்ல் பெருமளவில் போலி வாக்காளர்களை சேர்க்க முயற்சி - நரேஷ் குப்தா
சென்னை: மதுரை லோக்சபா தொகுதியில் பெருமளவில் வெளித் தொகுதி வாக்காளர்களை போலியாக முயற்சிகள் நடைபெறுகின்றன என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை தொகுதியில் மு.க.அழகிரி நிற்கலாம் என பேச்சு அடிபட்டு வரும் நிலையில், நரேஷ்குப்தாவின் இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரையில் பெருமளவில் போலி வாக்காளர்களைச் சேர்க்க மனுக்கள் வந்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 90 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன.
இதுகுறித்து விசாரிப்பதற்காக மாநில கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி கே. சத்யகோபால் நியமிக்கப்பட்டார்.
அவரது விசாரணையில் சில விண்ணப்பங்களில் வாக்காளர் குறித்த முக்கியத் தகவல்கள் விடுபட்டிருந்ததும், சிலர் உறவினர் முகவரியை அளித்திருந்ததும் தெரியவந்தது.
சில விண்ணப்பங்களில் இருந்த முகவரிகளில் சென்று விசாரித்தபோது, தாங்கள் விண்ணப்பிக்கவே இல்லை என்று விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
வேறு சில விண்ணப்பங்களில் இருந்த முகவரிகளில் விண்ணப்பதாரர்கள் வசிக்கவில்லை என்றும் தெரியவந்தது.
வேறு தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை, மதுரைத் தொகுதியில் சேர்ப்பதற்கு நடந்த முயற்சியே இது.
மதுரையில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கோரி வந்துள்ள விண்ணப்பங்களை ஆய்வுசெய்ய கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யகோபால் மீண்டும் மதுரை செல்கிறார்.
கடந்த 3 வாரங்களில், சென்னையில் 34 ஆயிரம் பேர் உள்பட தமிழகம் முழுவதும் புதிதாக 4 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்னதாக, வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்க்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள் சென்னையிலுள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளோம்.
சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் வேறு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளாரா என்று சரிபார்க்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், ஏற்கெனவே இடம்பெற்றுள்ள வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து நீக்குதல் ஆகியவற்றை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
அதேபோல், தேர்தல் அதிகாரிகள் தானாகப் பெயர்களை நீக்கவோ, சேர்க்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இடம்பெறக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. எனவே, புதிய விண்ணப்பதாரர்களின் பெயர் தீவிர ஆய்வுக்குப் பின்னரே, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். வாக்காளர் பட்டியலை இறுதி செய்வதில் அவசரம் காட்ட மாட்டோம் என்றார் நரேஷ் குப்தா.