அவர்களுக்கு 'அல்வா' கொடுங்கள்!-விஜய்காந்த்
அம்பாசமுத்திரம்: என்னை தொடர்ந்து பிரச்சாரத்துக்கு வரும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு அல்வா கொடு்ங்கள் என்று நெல்லை தொகுதி தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்துப் பேசுகையில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
அம்பாசமுத்திரத்தில் அவர் பேசியதாவது,
தலைவர்கள் சிலையை திறக்கிறார்கள். மாலை போடுகிறார்கள். ஆனால் தலைவர்கள் சொல்கிற கருத்துக்களை காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.
கல்விக்கண் திறந்தவர் காமராஜர். இன்று அவரது ஆட்சி தான் நடக்கிறது என்பவர்கள் அந்த கல்வியை தனியாருக்கு விற்று விட்டார்கள். சாராய கடையை அரசே நடத்தும் என்று வைத்துக் கொண்டார்கள்.
எந்த ரோடும் ஒழுங்காக இல்லை. கேட்டால் மணல் லாரிகள் சென்று இப்படி ஆகி விட்டது என்கிறார்கள். மணல் திருட்டுக்கு முதல் பிள்ளையார் சுழி போட்டது அதிமுக. டாஸ்மாக் கடையை அரசே தொடங்கி பிள்ளையார் சுழி போட்டதும் ஜெயலலிதாதான். கருணாநிதிக்கு பிள்ளையார் பிடிக்காது. ஆனால் சுழி பிடிக்கும். எனவே இதை அவரும் வைத்துக் கொண்டார்.
இவர்கள் போட்டி போட்டு நாட்டை கெடுத்து விட்டார்கள். நீங்கள் யாரை கைகாட்டுகிறீர்களோ அவர்கள் தான் ஆட்சிக்கு வர வேண்டும். இந்த முறை எங்களை கை காட்டுங்கள்.
காவிரி பிரச்சினை, பாலாறு பிரச்சினை. இன்னும் தீர்க்கவில்லை. மத்திய ஆளும் கூட்டணி தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது.
படிப்பு சர்டிபிகேட்டுகளை கொடுத்தால் பாங்கில் கடன் கொடுப்பார்கள் என்றார் சிதம்பரம். எங்கே கடன் கொடுத்தார்கள். நெல், கரும்புக்கு விலை இல்லை. கேட்டல் கோதுமை கொடுக்கிறோம் என்கிறார்கள். கூட்டுறவு வங்கி கடன் ரத்து செய்தார்கள். யாருக்கு லாபம்? பெரிய விவசாயிகள் டிராக்டர் கடன் வாங்கியது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிறு விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. ஏறிய விலைவாசி ஏறினது தான்.
நான் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று சொன்னேன். இன்று காங்கிரஸ் கட்சி விவசாய உரங்களை வீடு தேடி கொடுப்போம் என்று சொல்கிறார்கள்,
ஒவ்வொரு வீடாக ஓட்டுக்கு தாம்பூலத்தில் வைத்து ஆயிரம் ரூபாயை கொடுக்கும் போது ரேசன் பொருட்களை வீடு, வீடாக கொடுக்க முடியாதா? அதிமுகவும்-திமுகவும் கொள்ளை அடிக்கிறார்கள்.
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். செத்தால் எல்லோருக்கும் ஆறுக்கு மூன்று தான்.
அவர்கள் 3 மாணவிளை உயிரோடு கொளுத்தினார்கள். தேர்தல் அதிகாரிகளை 2 பேருமே தாக்கினார்கள். கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு நடந்தது. இன்று அப்படி வழக்கே இல்லை என்கிறார்கள். டான்சி நிலத்தில் என் கையெழுத்து இல்லை என்கிறார்கள். இதை திமுக வேடிக்கை பார்க்கிறது. இருவரும் கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள்.
ஒரு கட்சி குடும்ப கட்சி, மற்றொரு கட்சி தோழி குடும்ப கட்சி. மக்களுக்காக பாடுபடுவது தேமுதிகதான்.
அல்வாவுக்கு புகழ் பெற்றது நெல்லை. அது எனக்கு வேண்டாம், என்னை தொடர்ந்து பிரச்சாரத்துக்கு வரும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு அதைக் கொடுங்கள்.
இங்குள்ள வி.கே.புரத்தில்தான் நான் படித்தேன். படித்த, படிக்காத இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டம் என்னிடம் உள்ளது. எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியில் இடையில் புகுந்தவர்தான் ஜெயலலிதா. அண்ணாவிடம் இடை சொருகியவர்தான் கருணாநிதி.
இருவரும் கட்டிய வீட்டிற்குள் புகுந்தவர்கள். அதிமுக போனால் தி்முக, திமுக போனால் அதிமுக என இருந்தால் நாடு எப்படி உருப்படும். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். உட்கார வைத்து பவரை கொடுத்து பாருங்கள். உங்கள் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து காட்டுகிறேன்.
திமுக போலீஸ், அதி்முக போலீஸ் என்று உள்ளது. இது மாறவேண்டும். மாறினால்தான் நாடு உருப்படும். ஆட்சியாளர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் சல்யூட் அடிக்கிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் எனக்கு சல்யூட் அடிக்கும் அதிகாரிகளுக்கு பதவி போய்விடும். போலீஸ் டிரஸ்சுக்கு என்று ஒரு ஆஸ்தஸ்து உள்ளது. அதை காப்பாற்ற வேண்டும்.
இங்கே எங்கள் கட்சி கொடியை கட்டக் கூடாது என்று போலீசார் சொன்னார்களாம். கொடி கட்ட விடாவிட்டால் நடுரோட்டில் உட்காருவேன். தமிழகம் ஸ்தபிக்கும். உடனடியாக சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு நரேஷ் குப்தாவை சென்று பார்ப்பேன் என்றார்.