மேலும் 5 தேமுதிக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிப்பு
கன்னியாகுமரியில் 26ம் தேதி பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்னர் 9 வேட்பாளர்கள் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் விஜயகாந்த்.
அதன்படி கன்னியாகுமரியில் ஆஸ்டின், மதுரையில் முத்துலெட்சுமி, விருதுநகரில் மா.பா.பாண்டியராஜன், திண்டுக்கல்லில் முத்துவேல்ராஜ், தேனியில் சந்தானம், திருச்சியில் விஜயகுமார், சேலத்தில் மோகன்ராஜ், நாமக்கல்லில் மகேஸ்வரன், நெல்லையில் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது 2வது பட்டியலை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.
அதன் விவரம்:
வட சென்னை-யுவராஜ்
தர்மபுரி-இளங்கோவன்
தூத்துக்குடி-சுந்தர்
கிருஷ்ணகிரி-பி.டி.அன்பரசன்
திருவண்ணாமலை-எஸ்.மணிகண்டன் ஆகியோர்.
இவர்களில் யுவராஜ் வட சென்னை மாவட்ட செயலாளர் ஆவார். தர்மபுரி வேட்பாளர் இளங்கோவன் ஒரு டாக்டர் ஆவார். மாவட்ட செயலாளராக இருக்கிறார்.
கிருஷ்ணகிரி அன்பரசன், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளராக இருக்கிறார்.
திருவண்ணாமலை எஸ்.மணிகண்டன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளராக இருக்கிறார்.
இதுவரை 14 வேட்பாளர்களை தேமுதிக அறிவித்துள்ளது. ஆனால் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முரசு..முதல் வெற்றி-விஜயகாந்த்:
இதற்கிடையே லோக்சபா தேர்தலில் தனது கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 8.33 சதவீத வாக்குகள் பெற்றது. என்னையும் விருத்தாசலம் தொகுதி மக்கள் ஜெயிக்க வைத்தனர்.
அப்போது தேமுதிக வேட்பாளர்கள் அனைவருக்கும் முரசு சின்னம் கிடைத்தது. அதே போல் இந்த பாராளுமன்ற தேர்தலுக்கும் முரசு சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தோம். அது நிராகரிக்கப்பட்டது.
ஆனால் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.