பேனர் வைப்பதை தடுத்த இன்ஸ்பெக்டருடன் விஜயகாந்த் வாக்குவாதம்
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பிரசாரம் செய்தபோது தேமுதிகவினர் பேனர்களை வைக்க விடாமல் தடுத்த இன்ஸ்பெக்டருடன் விஜயகாந்த் கடும் வாக்குவாதம் புரிந்தார்.
கடையநல்லூரில் தேமுதிக பிரசாரக் கூட்டம் நடந்தது. அப்போது போலீஸாருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார் விஜயகாந்த்.
அவர் கூறுகையில், எனது பிரசாரத்திற்காக தேமுதிக பேனரை வைக்க போலீசார் அனுமதி மறுத்து வருவதாக தொண்டர்கள் என்னிடத்தில் கூறினர். நான் போலீஸ் துறையினருக்கு மரியாதை கொடுத்து வருகின்றேன். அந்த மரியாதையை காப்பாற்ற அவர்களுக்கு தெரியவில்லை.
நான் கை அசைத்தால் தமிழ்நாடே ஸ்தம்பித்து போகும். நடுரோட்டில் உட்கார்ந்து போராடவும் தயங்கமாட்டேன்.
கட்சி தலைவர்கள் பிரசாரத்திற்கு வரும்போது பேனர் வைக்கலாம் என விதிமுறை இருந்தும் போலீசார் அனுமதி மறுப்பது ஏன்...என்றார்
விஜயகாந்த் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் பேனர்களை வைக்க தடை செய்வதாக தொண்டர்கள் கூறினர்.
இதையடுத்து அங்கு நின்றிருந்த இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரை அழைத்து விஜயகாந்த் கோபமாக பேசினார்.
பேனர் வைக்க அனுமதி மறுப்பது ஏன்...யார் சொல்லி பேனர் வைக்க அனுமதி மறுக்கீர்கள் என சராமரி கேள்வி கேட்டார்.
அதற்கு இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் இனிமேல் பேனர் வைக்க அனுமதி அளிக்கின்றேன் என்றார். ஆனால் கோபம் குறையாத விஜயகாந்த் என்னுடைய பிரச்சாரம் இங்கு முடிந்துவிட்டது. இனிமேல் அனுமதி அளித்து என்ன பயன் என்றார்.
பின்னர் மாவட்ட செயலாளர் திருப்பதியை அழைத்து இதுகுறித்து உடனே தமிழக தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவுக்கு பேக்ஸ் அனுப்புமாறு கூறினார். இந்த சம்பவத்தால் கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களிடேயே பரபரப்பு ஏற்பட்டது.