மேலும் வட்டி விகிதக் குறைப்பு! - பிரதமர் அறிவிப்பு
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க ஜி-20 நாடுகளின் மாநாடு லண்டனில் அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கிறது.
இதில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கிறார். மாநாட்டில் இந்தியா சார்பில் என்ன விஷயங்களை எடுத்து வைக்கலாம் என்பது குறித்தும், தற்போதைய பொருளாதார நிலை குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, குமார் பிர்லா, கே.பி. காமத், சசிருயா, சாஜன் ஜிண்டால், ஆர்.பி. கோயங்கா உள்ளிட்டோருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறுகையில், 'சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டும், அடுத்த ஆண்டிலும் கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதை தடுக்கும் வகையில், மேலும் சில பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டியது அவசியம்' என்றார்.
தொழிலதிபர்களின் அனைத்துக் கருத்துக்களையும் கேட்டுக் கொண்ட மன்மோகன் சிங், 'பணவீக்கம் மிகவும் குறைந்துள்ளதால், வட்டி வீதம் மேலும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் விதத்தில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்கள் அதிகரிக்கப்படும்' என்றார்.
பணவீக்கம் பூஜ்யத்தைத் தொடும் நிலையில் உள்ளதால், மேலும் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.