கஸாப்புக்கு பெண் வக்கீல்-கோர்ட் நியமனம்
அவரது பெயர் அஞ்சலி வாக்மரே. மகாராஷ்டிர சட்ட சேவை ஆணையத்தைச் சேர்ந்தவர். இவர் கஸாப்புக்காக ஆஜராகி வாதாடுவார்.
அஞ்சலி நியமனத்தை, மும்பை சிறப்பு கோர்ட் நீதிபதி தஹிலியானி இன்று அறிவித்தார். மேலும், இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 6ம் தேதி ஆர்தர் சாலை சிறையில் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் தொடங்கும் எனவும் இன்று நீதிபதி அறிவித்தார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு நீதிபதி தஹிலியானி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்சிங் மூலம் இது நடந்தது.
அப்போது ஆர்தர் சாலை சிறையில் உள்ள கஸாப்பிடம், வீடியோ கான்பரன்சிங் மூலம் வக்கீல் நியமனம் குறித்து நீதிபதி தெரிவித்தார்.
கஸாப்பிடம் அவர் கூறுகையில், உனக்காக வக்கீல் அஞ்சலி வாக்மரே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உனக்காக ஆஜராகி வாதாடுவார். இன்னொரு வக்கீலும் அவருக்குத் துணையாக நியமிக்கப்படுவார் என்றார்.
ஏப்ரல் 6ம் தேதி வாக்மரே, கஸாப்பை நேரில் சந்திக்கவுள்ளார். மேலும் போலீஸ் குற்றப்பத்திரிக்கையை கஸாப்புக்கு அவர் படித்துக் காட்டுவார்.
இன்றைய விசாரணையின்போது அஞ்சலி வாக்மரேவும் உடன் இருந்தார். அவரை, கஸாப்புக்கு நீதிபதி அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அஞ்சலி நியமனத்தை தான் எதிர்க்கவில்லை என்று கஸாப் தெரிவித்தான். மேலும், தனக்கு படிக்க செய்தித் தாள்கள் தேவை என்றும் கஸாப் தெரிவித்தான்.
ஏப்ரல் 6ம் தேதி அக்கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதி பதிலளித்தார்.
இன்றைய விசாரணையின்போது இன்னொரு குற்றவாளியான அன்சாரியும் உடன் இருந்தான்.
அப்போது தனக்காக ஆஜராக வக்கீல்கள் சுதீப் பஸ்போலா, முபின் சோல்கர், ஹைதர் அலி மொமீன் ஆகியோரது பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களில் ஒருவரை தனது வக்கீலாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தான்.
இவர்களை நியமிக்க கோர்ட் மறுத்தால் தற்போது தனக்காக வாதாடும் இஜாஸ் நக்வியையே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வதாகவும் அவன் தெரிவித்தான்.
இன்னொரு குற்றவாளியான சபாபுதீன் தான் தொடர்ந்து இஜாஸ் நக்வியையே பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்தான்.