ஸ்ரீபெரும்புதூருக்கு மாறிய ஏ.கே.மூர்த்தி
பாமகவின் தளகர்த்தர்களில் ஒருவர் ஏ.கே.மூர்த்தி. ஏ.கே.47 வேகத்தில் செயல்படக் கூடியவர். துடிப்பானவர். மாநாடுகள், கூட்டங்களை நேர்த்தியாக ஏற்பாடு செய்து அய்யாவிடம் நற்பெயர் பெற்றிருப்பவர்.
டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸின் செல்லப் பிள்ளையாக வலம் வருபவர்களில் ஒருவர். தீவிர பாமக விசுவாசி.
சென்னை தி.நகரில் மாம்பலம் ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் காய்கறி வைத்திருந்த மூர்த்தி மத்திய இணை அமைச்சராக உயர்வார் என்று யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.
மத்திய அமைச்சராகி இவர் என்ன செய்யப் போகிறார் என்று எல்லோரும் குழம்பிப் போயிருந்த நேரத்தில் தனது செயல்பாடுகளால் அடடே என்று சபாஷ் போட வைத்தவர் மூர்த்தி.
தமிழகத்தின் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை என்று இருந்த ரயில்வேயை திருப்பிக் கொண்டு தமிழகத்தின் பக்கம் பாய விட்டவர் மூர்த்திதான்.
அதுவரை ரயில்வே அமைச்சர் பதவி தமிழகத்தைச் சேர்ந்த யாருக்குமே இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் முதல் முறையாக ரயில்வே இணை அமைச்சர் பதவியை மூர்த்தியிடம் கொடுத்தார் ராமதாஸ்.
அந்தப் பொறுப்பை செம்மையாக செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார் மூர்த்தி. இத்தனைக்கும் இவருக்கு அவ்வளவாக எழுதப் படிக்க வராது என்றும் ஒரு பேச்சுண்டு.
அன்று மூர்த்தி போட்ட தண்டவாளத்தில்தான் இன்று பாமகவின் ஆர்.வேலுவும் அதி வேகமாக நடைபோட்டார் என்றால் மிகையில்லை.
இதுவரை செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வந்தார் மூர்த்தி. ஆனால் தொகுதி மறு சீரமைப்பின் கீழ் செங்கல்பட்டு நீக்கப்பட்டு காஞ்சிபுரம் என மாறி விட்டது.
காஞ்சிபுரம் தொகுதி இந்த முறை பாமகவுக்கு கொடுக்கப்படவில்லை. இதையடுத்து அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு இடம் மாறி வந்துள்ளார் மூர்த்தி.
இந்தத் தொகுதியில்தான் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே மாபெரும் பரபரப்பான தொகுதிகளில் ஒன்றாக ஸ்ரீபெரும்புதூர் மாறியுள்ளது.
இருவரும் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பதால் பணத்துக்கு பஞ்சமில்லாமல் மோதுவார்கள்.
வெல்லப் போவது முன்னாள் ரயிலா அல்லது இந்நாள் நெடுஞ்சாலையா என்ற வாதம் இப்போதே டீக்கடைகளில் தொடங்கி விட்டது.