ஈரோடு தேமுதிக வேட்பாளர் பி.ஏ. பட்டதாரி முத்து வெங்கடேஸ்வரன்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லோக்சபா தொகுதி ஈரோடு. இத்தொகுதியின் முதல் தேமுதிக வேட்பாளர் என்ற பெருமையும், இத்தொகுதிக்கு முதல் நபராக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் என்ற பெருமையும் முத்து வெங்கடேஸ்வரனுக்குக் கிடைத்துள்ளது.
பி.ஏ பட்டதாரியான முத்து வெங்கடேஸ்வரன், திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக துணைச் செயலாளராக உள்ளார். இவரது தந்தை கோவிந்தசாமி பழுத்த அரசில்வாதி.
ருத்ராவதி பேரூராட்சித் தலைவராக பத்து ஆண்டு காலம் பதவி வகித்தவர் கோவிந்தசாமி. தந்தைக்குக் கிடைத்த நற்பெயரால் மகனுக்கும் அப்பகுதியில் நல்ல பெயர் உண்டு.
30 வயதே ஆகும் இளைஞரான முத்து வெங்கடேஸ்வரன் திருப்பூர் மாவட்டம் குன்டடத்தைச் சேர்ந்தவர்.
முதல் முறையாக தேர்தலில் நிற்கும் முத்து வெங்கடேஸ்வரன், ஈரோடு மாவட்டத்தில் பெரும் பிரச்சினையாக உள்ள சாயக் கழிவு நீர் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைப்பேன், ஈரோடு தொகுதிக்குட்பட்ட தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன், ஈரோடு நகரில் பாலம் தேவை என்ற நீண்ட கால கோரிக்கைக்கு விடிவு காலம் பிறக்க பாடுபடுவேன் என்கிறார்.