அதிமுக கூட்டணி-சிபிஐக்கு 3 தொகுதிகள் அறிவிப்பு
சென்னை: அதிமுக கூட்டணியில் பாமகவைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு முடிவடைந்துள்ளது. அக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக பாமகவுக்கான தொகுதிப் பங்கீட்டை ஜெயலலிதா முடித்தார். கூட்டணியில் சேர்ந்த உடனேயே அக்கட்சிக்கு 7 சீட் தருவதாகவும், ராஜ்யசபா சீட் ஒன்று தரப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், பாமகவுக்கான தொகுதிகளையும் உடனடியாக அவர் அறிவித்தார்.
இருப்பினும் சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இழுபறியாகவே இருந்து வந்தது. இதையடுத்து நேற்று மாலை இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையை ஜெயலலிதாவே நடத்தினார்.
போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில துணை செயலாளர் ஜி.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாலர் வரதராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எம்.பி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இதன் இறுதியில், சிபிஐக்கான தொகுதிகள் மட்டும் உடன்பாடாகின.
இரவு 9.15 மணிக்கு பேச்சு வார்த்தையை முடித்துவிட்டு, தா.பாண்டியன் உள்ளிட்டோர் வெளியே வந்தனர்.
3 தொகுதிகள் ...
பின்னர் ஜெயலலிதா, தா.பாண்டியன் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 3 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
அதன்படி, வடசென்னை, நாகப்பட்டினம் (தனி), தென்காசி (தனி) ஆகிய 3 தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பேச்சுவார்த்தை குறித்து தா.பாண்டியனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, எங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. வேட்பாளர்கள் யார்-யார்? என்பதை விரைவில் அறிவிப்போம்.
எங்கள் அணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். இந்த உடன்படிக்கை எங்களுக்கு முழு திருப்தி அளிக்கிறது.
3 மணி நேரம் ஏன் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று கேட்கிறீர்கள். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் இருக்கிறது அல்லவா? ஆகவே நிறைய நேரம் பேச வேண்டி இருந்தது என்றார்.