'குமரி' இல்லாவிட்டால் ராஜினாமா-காங் எம்எல்ஏ மிரட்டல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் இல்லையென்றால் அம்மாவட்டத்தில் உள்ள இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மாவட்ட காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் உடன்பாட்டில் கன்னியாகுமரி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இது கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கன்னியாகுமரி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் இன்று கன்னியாகுமரியில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடந்தினர்.
இதில் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக சென்னை சென்றுள்ளனர். இன்றைய கூட்டம் முழுவதையும் தொண்டர்கள் நடத்தினர்.
அதில் காங்கிரசுக்கு கன்னியாகுமரி தொகுதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இல்லை என்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உட்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.