சென்னை: காங். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
சென்னை: தமிழ்நாடு மாநில் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் வீட்டில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தலைமறைவானது. இதில் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக இருப்பவர் பிரகாஷ். இவரது வீடு சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜெகநாதபுரத்தில் இருக்கிறது. நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூக்கி கொண்டிருந்தார்.
இந்நிலையில் இரவு சுமார் 2 மணிக்கு மர்ம கும்பல் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. பிரகாஷ் எப்போது பால்கனியில் தான் உறங்குவார் என்ற எண்ணத்தில் அவரை குறிவைத்து அந்த கும்பல் பால்கனியில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளது.
அதில் பெட்ரோல் பால்கனி சுவர் மற்றும் தரையில் சிதறி வேகமாக பரவியது. அந்த அறை முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்நிலையில் நன்றாக தூங்கி கொண்டிருந்த பிரகாஷ் சில மணி நேரங்கள் கழித்து தான் வீட்டில் கருகிய வாசனை வருவதை கண்டுபிடித்துள்ளார்.
இதையடுத்து பால்கனியை சென்று பார்த்த போது அந்த அறை தீப்பிடித்து எரிவதையும், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதுக்கு அடையாளமாக பாட்டில் சிதறல்கள் கிடப்பதையும் கண்டுபிடித்துள்ளார்.
இதையடுத்து சேத்துப்பட்டு போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ராஜாமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சமயத்தில் வீட்டு பால்கனியில் யாரும் தூங்கவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
தேர்தல் நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் வேறு கட்சியினர் யாராவது இதில் ஈடுபட்டிருப்பார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்குமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.