ரயில்வே இணை அமைச்சராக சீரிய சேவை - வேலுவுக்கு மீண்டும் சீட்
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.வேலு. ஆனால் அரக்கோணம் தொகுதியில் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பளித்தார் டாக்டர் ராமதாஸ்.
நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேலுவுக்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் பொறுப்பைப் பெற்றுத் தந்தார்.
ரயில்வே இணை அமைச்சாராக சிறப்பாக பணியாற்றினார் ஆர்.வேலு. முந்தைய இணை அமைச்சரான பாமகவின் ஏ.கே. மூர்த்தியைப் போலவே வேலுவும் தமிழகத்திற்கு பல திட்டங்களையும், ரயில்களையும் கொண்டு வந்தவர்.
குறிப்பாக திருச்செந்தூருக்கு சென்னையிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ரயில் வருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள். ஆனால் அத்தனையையும தாண்டி அந்த ரயிலை ஓட வைத்த பெருமை வேலுவுக்கே உண்டு.
இப்போது அந்த ரயிலுக்கு கிடைத்துள்ள பிரமாண்ட வரவேற்பினால் வாரத்தில் ஐந்து நாட்களும் ஓடப் போகிறது.
அதேபோல வேலுவுக்கும், பாமகவுக்கும் மிக முக்கியமான சாதனை, சேலம் ரயில்வே கோட்டம். மிகப் பெரிய அளவில் அதற்கு கொடுக்கப்பட்ட முட்டுக் கட்டைகளும், அதைத் தாண்டி வர தமிழகத்தி்ல் போராட்டங்களும் நாடறிந்தது.
உடும்புப் பிடியாய் இருந்து, சேலம் ரயில் கோட்டம் நனவாக பாடுபட்டவர்களில் வேலுவும் முக்கியமானவர்.
நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலளித்தவர் லாலு அல்ல, மாறாக வேலுதான்.
தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை மிகச் சிறப்பாகவும், செம்மையாகவும் செய்தவர் என்ற பாராட்டு பெற்றவர் வேலு.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான வேலு, பாமகவுக்கு கிடைத்த நல்ல சேவகர்களில் ஒருவர்.
இந்த முறையும் அரக்கோணம் தொகுதியிலேயே நிற்கிறார் வேலு. அவரை எதிர்த்து போட்டியிடப் போவது திமுக. திமுக அணியில் ஜெகத்ரட்சகன் வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இருப்பினும் வேலுவின் வேலைக்கு மக்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பாமக உள்ளது.