மதுரையில் போட்டியிடுவது உறுதி - ஏப். 2ல் நேர்காணலில் அழகிரி பங்கேற்பு
மதுரை: மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மு.க.அழகிரி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஏப்ரல் 2ம் தேதி நடைபெறும் நேர்காணலில் அவர் பங்கேற்கவுள்ளார்.
சென்னையில் உள்ள 3 தொகுதிகள் மற்றும் மதுரை உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
இதில் மத்திய சென்னையில் தயாநிதி மாறன் போட்டியிடுவது உறுதி. அதேபோல மதுரையில் மு.க.அழகிரியும், கன்னியாகுமரியில் அவரது மகள் கயல்விழியும் போட்டியிடுவதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
மு.க.அழகிரியை மதுரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரி அவருக்காக 140க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், மதுரை திமுகவினர் அழகிரிக்காக வாக்கு சேகரிக்கவும் ஆரம்பித்து விட்டனர். சுவர் விளம்பரங்களும் கூட செய்ய ஆரம்பித்து விட்டனர்.
மேலும், மதுரை சீட்டைக் கேட்டு திமுகவினர் யாரும் மனு செய்யவும் இல்லை. எனவே அழகிரி மதுரையில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இதை உறுதிப்படுத்துவது போல ஏப்ரல் 2ம் தேதி நடைபெறும் நேர்காணலுக்கு வருமாறு கூறி அழகிரிக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
இதை அழகிரியே கூறியுள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருகிற 2-ம் தேதி தலைமைக்கழகத்தில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்துள்ளது. நான் செல்கிறேன். மதுரை தொகுதியில் யார் போட்டியிட்டாலும் தி.மு.க.வுக்கு வெற்றி உறுதி. இதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்வோம் என்றார் அழகிரி.
அழகிரியை கட்சி மேலிடம் நேர்காணலுக்கு அழைத்துள்ளதால், மதுரை திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். தொகுதி நமக்குத்தான் என்று குஷியாக கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications