சிதம்பரம்: திருமா 'பாசம்'.. குழம்பும் ராமதாஸ்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை எதிர்த்து யாரை நிறுத்துவது என்ற குழப்பத்தில் உள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 தனித் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
இதில் சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே இரண்டு முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றாலும் வெற்றி வாய்ப்பை இழந்தவர் திருமாவளவன்.
இம்முறை மீண்டும் அவரே சிதம்பரம் தொகுதியில் நிற்க வேண்டும் என நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
விழுப்புரம் தொகுதியில் யாரை நிறுத்துவது என்பது பற்றி முடிவு செய்ய அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை நடக்கிறது.
வேளச்சேரியில் நடக்கும் இக் கூட்டத்தில் சிதம்பரம், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டச் செயலாளரான சிந்தனை செல்வன் இரு முறை சட்டசபை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வியடைந்தார். அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படலாம் என்கிறார்கள்.
அதிமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதி தங்களுக்கு வேணாடம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியும் கூட அதை பாமகவுக்கு ஒதுக்கிவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சிதம்பரத்தில் தனக்கு மிக நெருக்கமான திருமாவளவன் போட்டியிடுவார் என்பதால் அந்தத் தொகுதி வேண்டாம் என்றார் ராமதாஸ்.
ஆனால், தொகுதி தரப்பட்டுவிட்டதால், தனக்கு ஒதுக்கப்பட்ட மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட ராமதாஸ் சிதம்பரம் தொகுதி குறித்து இன்னும் முடிவெடுக்காமல் உள்ளார்.
திருமாவளவனுக்கு சாதகமாக வீக்கான வேட்பாளரை நிறுத்தினால் அது அதிமுகவின் கோபத்தை சம்பாதித்துக் கொடுத்துவிடும் என்பதால் பலமான வேட்பாளரையே நிறுத்த ராமதாஸ் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக தொகுதி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்திக் கொண்டு்ள்ளார்.












Click it and Unblock the Notifications