பெங்களூர் திருவள்ளூவர் சிலை-பாஜக மீது காங். தாக்கு
பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக பெங்களூரில் திருவள்ளூவர் சிலை திறப்பது தொடர்பாக பாஜகவினர் பேசி வருகின்றனர். தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் சிலை விவகாரத்தை மறந்து விடுவார்கள் என பெங்களூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து குமரேசன் கூறுகையில்,
பெங்களூரில் திருவள்ளூவர் சிலை பல ஆண்டுகளாக மூடி கிடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வந்தவுடன் பாஜகவினர் திருவள்ளூவர் சிலையை திறப்பதாக கூறுகிறார்கள்.
திருவள்ளூவர் சிலை மூடுவதற்கு யார் காரணம்? அதை மீண்டும் திறக்க உதவியது யார் போன்றவற்றை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
நான் பெங்களூர் மாநகராட்சி பொதுப்பணி குழு தலைவராக இருந்த போது கேஜே ஜார்ஜ் எம்எல்ஏ மூலம் சிலை வைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. கர்நாடக திமுக தலைவர் திராவிட மணியின் ஆர்வமும் இதில் அடங்கும். சிலை இருக்கும் இடத்தில் பூங்கா ஒன்றை அமைக்க நான் ரூ. 3 லட்சத்தை அனுமதித்தேன்.
அப்போது திருவள்ளூவர் சிலையை திறக்கக்கூடாது என பாஜகவினரும், மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்தவர்களும் கடுமையாக எதிர்த்தார்கள். பாஜகவின் பிரமிளா நேசர்கி, திருவள்ளூவரை அவமதிக்கும் விதமாக பேசினார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவினர் திருவள்ளூவர் சிலையை திறக்க போவதாக கூறினர். நாங்களும் சரி எப்படியாவது திருவள்ளூவர் சிலை அமைந்தால் போதும் என அமைதி காத்து வந்தோம்.
காங்கிரஸ் தமிழர்களுக்கு பாதுகாப்பு தரும்...
திருவள்ளூவர் சிலையை திறப்பதாக பாஜகவினர் கூறுவது வெறும் நாடகம். தேர்தலில் ஓட்டு வாங்கவே அவர்கள் இந்த நாடகத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.
தேர்தலுக்கு பின் அவர்கள் சிலை விவகாரத்தை மறந்துவிடுவார்கள். திருவள்ளூவர் சிலை திறப்பதில் காங்கிரசார் கடுமையாக உழைத்தை யாரும் மறுக்க முடியாது.
கர்நாடகத்தில் காங்கிரசார்களால் மட்டுமே தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும். இதை தமிழர்கள் மறக்கமாட்டார்கள். தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். பாஜகவை நம்பி மோசம் போகமாட்டார்கள் என்றார் அவர்.