தமிழகம்-தேர்தல் கண்காணிப்பில் 116 பார்வையாளர்கள்
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பணியில் 116 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 9 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.
தமிழகத்தில் மே 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 16ம் தேதி தொடங்குகிறது.
தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் 116 பார்வையாளர்கள் நியமிக்கப்படுகினறனர்.
அனைவருமே இந்திய ஆட்சிப் பணி, இந்திய வருவாய் பணி, இந்திய வனப்பணி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆவர்.
ஒரு லோக்சபா தொகுதிக்கு 3 பேர் (2 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஒருவர்) என்ற வீதத்தில் இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். அந்த வகையில், சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கும் 9 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
நீலகிரி தொகுதிக்கு மட்டும் 2 தேர்தல் பார்வையாளர்கள் இருப்பார்கள்.
வட சென்னை லோக்சபா தொகுதியின் கீழ் வரும் திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டசபைத் தொகுதிகளில் சுனில் குமார் சிங்கும், கொளத்தூர், திரு.வி.க.நகருக்கு சுக்லாவும், பெரம்பூர், ராயபுரத்தில் பாலியும் தேர்தல் பார்வையாளர்களாக செயல்படுவார்கள்.
தென் சென்னை லோக்சபா தொகுதியின் கீழ் வரும் வேளச்சேரி, சோழிங்கநல்லூர் தொகுதிகளில் அஞ்சலி பிரசாத்தும், சைதாப்பேட்டை, மயிலாப்பூருக்கு சத்தியவாசனும், தி.நகர், விருகம்பாக்கம் தொகுதிகளுக்கு மிகிர் குமாரும் பார்வையாளர்களாக செயல்படுவார்கள்.
மத்திய சென்னை லோக்சபா தொகுதியின் கீழ் வரும் எழும்பூர், ஆயிரம் விளக்கு சட்டசபைத் தொகுதிகளில் வீனா கனேகரும், வில்லிவாக்கம், அண்ணா நகரில் சிவக்குமாரும், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளில் அபையல் தயாளும் பார்வையாளர்களாக செயல்படுவார்கள்.