திமுகவுக்கு திராவிடர் கழகம் ஆதரவு-வீரமணி
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திராவிடர் கழகம், திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கும் என அதன் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும் திராவிடர் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடந்தது. இக்கூட்டத்தில் கழக தலைவர் வீரமணி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
மத்தியில் காங்கிரஸ் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை தந்துள்ளது. இதில் நாட்டுக்கு பல நலன்கள் மற்றும் வளங்கள் கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பாராட்டும் செயல்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. வரும் தேர்தலில் திமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்வதன் மூலம் நாட்டை பிரமாண்டமான வளர்ச்சியை நோக்கி அழைத்து செல்லப்படும். இதற்கான வாய்ப்பினை தமிழக வாக்காளர்கள் உருவாக்கி தர வேண்டும்.
திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்யும். களப்பணிகளை மேற்கொள்ளும். தமிழக மற்றும் மத்திய அரசின் சாதனைகளையும் விளக்கும் புத்தகம் ஒன்றை திராவிடர் கழகம் வெளியிடும்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். தமிழ் ஈழம் மலருவதை கண்டு மகிழும் முதல் ஆளாக இருப்பேன் என அவர் கூறியுள்ளார்.
வரும் 7ம் தேதி திருச்சியில் திராவிட கழக பொதுக்கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் வீரமணி.












Click it and Unblock the Notifications