ஐந்து முனை போட்டிக்கு தயாராகும் தென்காசி!
தென்காசி: தென்காசி தொகுதியில் காங்கிரஸ், இந்திய கம்ப்யூனிஸ்ட், தேமுதிக, பாஜக கூட்டணி மற்றும் புதிய தமிழகம் ஆகிய ஐந்து கட்சிகளுக்கும் ஓரளவு செல்வாக்கு இருப்பதால் இங்கு ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இதனால் சில ஆயிரம் ஓட்டுக்கள் கூட வெற்றியை நிர்ணயிக்க கூடியதாக அமையும்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி(தனி) தொகுதி ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. காங்கிரஸ் சார்பில் அருணாசலம் 6 முறை வெற்றி பெற்றார். அதன்பிறகு இந்த தொகுதி அதிமுக வசம் இருந்தது.
பின்னர் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் இந்த தொகுதியை கைப்பற்றியது. கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் இங்கு மொத்தம் 13 வேட்பாளர்கள போட்டியிட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அப்பாத்துரை, அதிமுக சார்பில் முருகேசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, பகுஜன் சமாஜ் லூக் ஜெயக்குமார், ஜனதா கட்சி சந்திரன் மற்றும் 8 சுயேட்சைகள் களத்தில் நி்ன்றனர்.
இதில் அப்பாத்துரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 176 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது அணிகள் மாறியுள்ள நிலையில் இந்த தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரசுக்கும், அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பாஜக கூட்டணியும், தேமுதிகவும் இங்கு தனித்து போட்டியிடுகின்றனர். புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்த முறையும் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை கட்சி தலைமை தீவிரமாக தேர்வு செய்து வருகிறது.
நெல்லையை சேர்ந்த வக்கீல் ராமேஸ்வரன் இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தெரிகிறது. இதே போல் வங்கி இயக்குனராக உள்ள விஸ்வநாதன், மாதவராவ் பெயரும் அடிபடுகிறது. இதில் விஸ்வநாதனுக்கு பவர்புல் மத்திய அமைச்சரின் முழு சிபாரிசு செய்துள்ளதால் அவருக்கு 75 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக காங்கிரசார் கூறுகின்றனர்.
தற்போது இந்திய கம்யூனிஸ்டில் சீட் பெறுவதில் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் சமூக சமத்துவதற்கான டாக்டர்கள் சங்க மாநில தலைவருமான டாக்டர் ரவிந்திரநாத், நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ராமகுரு ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
படித்தவர்கள் என்பதால் இவர்கள் இருவரில் யாருக்காவது ஒருவருக்கு சீட் வழங்குவதன் முலம் கட்சி மீது தொகுதியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரிகட்ட முடியும் என்று கட்சித் தலைமை கருதுகிறது. இதுதொடர்பாக நாளை 2ம் தேதி நெல்லையில் நடக்கும் மாவட்ட குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமகுரு, சங்கரன்கோவில் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர். நெல்லை மாவட்ட மண்ணின் மைந்தன் என்பதாலும், தென்காசியில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் இவர் பெயர் பிரபலம் என்பதும் முன்னாள் வாசுதேவநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணனின் உறவினர் என்பதாலும் இவருக்கு சீட் உறுதியாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications