புதுவை சிறையில் சீமானை சந்தித்தார் ராமதாஸ்
புதுச்சேரி: புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குநர் சீமானை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்று சந்தித்துப் பேசினார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டு புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று மாலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதுச்சேரி சிறைக்கு வந்தார். உள்ளே சென்று சீமானை சந்தித்துப் பேசினார்.
அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அவருடன் பாமக எம்.எல்ஏக்களும் வந்திருந்தனர்.
பின்னர் வெளியில் வந்த டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழிவாங்கும் நடவடிக்கையாக சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் என்ன செய்தார். அவர் செய்த ஒரே குற்றம் தென்திசையிலே ஒரு இனம் அழிக்கப்படுகிறது. இலங்கை தமிழர்கள் இனமே கூண்டோடு அழிக்கப்படுகிறார்கள் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து திரைப்பட கலைஞர்களை திரட்டியும், மற்ற கலைஞர்களை திரட்டியும் போராட்டம் நடத்தினார் என்பதுதான்.
தமிழ் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்புவதற்காக, தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்றைக்கு ஒட்டு மொத்த சினிமாத்துறை கலைஞர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த செயலை கண்டித்துக் கொண்டு இருக்கிறார்கள். இயக்குனர் சீமானை இந்த தேர்தல் நேரத்திலே உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களுடைய ஆர்வம் மட்டுமல்ல. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் வேண்டுகோளும், விருப்பமும் அது தான் என்றார் ராமதாஸ்.