வாம்மா மின்னலு..நம்ம மொக்கச்சாமி வந்துருக்காக!
ஒரு காலத்தில் எம்.பியாக இருந்தவர் நடிகர் ராமராஜன். அது ஒரு காலம். ஆனால் அதன் பின்னர் அவர் காணாமல் போனார். அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி அவரது அடிச்சுவட்டைத் தேடிப் பார்க்க வேண்டியதாயிற்று.
இந் நிலையில் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராமராஜன் தற்போது அதிமுக பிரசார மேடைகளைக் கலக்க ஆரம்பித்திருக்கிறார்.
திருச்சியில் நேற்று இரவு அதிமுக கூட்டம் நடந்தது. ராமராஜன்தான் சிறப்புப் பேச்சாளர். இரவு 10 மணிக்குத்தான் ராமராஜன் கையில் மைக்கைக் கொடுத்தனர்.
ராமராஜனின் பேச்சிலிருந்து சில துளிகள் ..
'தொட்டால் பூ மலரும்' படத்தில் வடிவேலு என்னத்த கண்னையாவிடம் கார் வாடகைக்கு வருமா என கேட்பார். என்னத்த கண்னையா உடனே 'வரும் ... ஆனா... வராது' என்பார்.
தமிழ்நாடும் இப்போ அப்படித்தான் இருக்கு.. 'வரும்... ஆனா வராது', எது வரும்..? கரண்டு பில் வரும். ஆனால் மின்சாரம் வராது.
'மாயி' படத்தில் வடிவேலுக்கு பெண் பார்க்க போகும் இடத்தில்... ''மாயி வந்துருக்காக... நம்ம மொக்கச்சாமி வந்துருக்காக... வாம்மா மின்னலுனு'' சொல்வாரு ஒருத்தர். அப்போது பொண்ணு மின்னல் மாதிரி சட்டுன்னு வந்திட்டு பட்டுன்னு மறைந்திடும்.
அப்படிதான் தமிழ்நாட்டில் மின்சாரம். படிக்கும் போது வரும், படுக்கும் போது போய்விடும். சோறு பொங்கும் போது இருக்கும்... மசாலா அரைக்கும் போது இருக்காது. மின்னல் மாதிரி மறைந்து விடும்.
100 படம் நடித்த விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார் என்று சரத்குமார் கட்சி தொடங்கினார். உடனே நானும் 100 படம் நடித்திருக்கிறேன் என கார்த்திக்கும் கட்சி தொடங்கி விட்டார். அடுத்து நானும் 100 படம் நடித்திருக்கிறேன் என கவுண்டமணியும், செந்திலும் கூட கட்சி தொடங்கிடுவாங்க.
என்ன கருப்பு எம்.ஜி.ஆர்..?:
கருப்பு எம்.ஜி.ஆர். என கூறும் விஜயகாந்த் அவர் நடித்த ஒரு படத்திலாவது எம்.ஜி.ஆர். படத்தை காட்டியுள்ளாரா? எம்.ஜி.ஆர். பெயரை கூற அவருக்கு தகுதியில்லை.
முதல்வன் படத்தில் வரும் ஒரு நாள் முதல்வர் போல ஜெயலலிதாவை ஒரே ஒரு நாள் முதல் அமைச்சராக்கி பாருங்க.. ஒரே நாளில் தமிழ்நாடு ஒளி பெறும் என்றார்.