நாகர்கோலில் பயங்கர வெடிபொருட்களுடன் 3 பேர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பயங்கர வெடிபொருட்கள் வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குமரி மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது திருத்துவபுரம் பகுதியில் ஒரு பெண் உள்பட 3 பேர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் முன்னு்க்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை திறந்து பார்த்தனர்.
அதில் 20 ஜெலட்டின் குச்சிகள், 200 டெட்டனேட்டர்கள், மற்றும் 23 அடி நீள வெடிமருந்து திரி ஆகியவை இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களில் லைலா என்ற பெண் பூவன்விளையை சேர்ந்தவர் என்றும், மற்ற இருவர் பாறாசாலையை சேர்ந்த சாய்குமார் மற்றும் வேலாயுதம் என தெரியவந்தது.
அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். அதில் அவர்கள் வெடிபொருட்களை கேரளாவில் இருந்து வாங்கி வருவததாகவும், குமரி மாவட்டத்தில் அதனை விற்பனை செய்ய இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வெடிமருந்து பொருட்களை வாங்கும் நபர் யார், எதற்காக வெடிமருந்து பொருட்களை வாங்குகிறார்கள் என்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.