'முடிந்துவிடவில்லை'-அதிமுக-சிபிஎம் பேச்சு தொடர்கிறது!
சென்னை: அதிமுக கூட்டணியில் சிபிஎம் தங்களுக்கு திருப்பூர் அல்லது விருதுநகர் வேண்டும் என அடம்பிடித்து வருகிறது. ஆனால், அதிமுகவோ இரண்டையும் ஒதுக்க மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை தொடர்கிறது.
அதிமுக கூட்டணியில் அதிமுக 22, பாமக 7 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால், மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இடையில் தொகுதி பங்கீடு தொடர்ந்து இழுபறியாகவே இருக்கிறது.
மீதமுள்ள 8 தொகுதிகளில் மதிமுகவுக்கு 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 தொகுதியும், மதிமுக குறைந்தபட்சம் 6 தொகுதியும் கேட்டு வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த இரண்டு கட்சிகளும் திருப்பூர் மற்றும் விருதுநகர் தொகுதியை கேட்டு வருகின்றன.
தங்களுக்கு திருப்பூர், மதுரை, கோவை, நாகர்கோவில் ஆகிய தொகுதிகளை மார்க்சிஸ்ட் கேட்டு வருகிறது. ஆனால், ஜெயலலிதா திருப்பூரை மதிமுகவுக்கு கொடுக்க நினைப்பதால் முடியாது என மறுத்துவிட்டார். அதே போல மதுரையை அதிமுகவுக்கே வைத்துக் கொள்ள நினைக்கிறார்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தங்களுக்கு திருப்பூரை தராவிட்டால் கண்டிப்பாக விருதுநகர் வேண்டும் என கூறியுள்ளது. இதற்கு விருதுநகரில் வைகோ போட்டியிட போவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அதிமுக திண்டுக்கல் தொகுதியை தர முன்வந்துள்ளது.
இதையடுத்து திருப்பூர் அல்லது விருதுநகர் என்ற பிடிவாதத்தை தளர்த்தியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திண்டுக்கல்லை பெற்று கொள்ள புதிய நிபந்தனை ஒன்றையும் விதித்துள்ளது. திண்டுகல்லுடன் திருச்சியை கூடுதலாக தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந் நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை வருமாறு நேற்று அதிமுக விடுத்த அழைப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது.
பேச்சு தொடர்கிறது... வரதராஜன் அறிக்கை:
இந் நிலையில் எல்லாம் 'முடிந்துவிடவில்லை' என்று விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேறு சில கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதாக சில நாளேடுகள் விஷமச் செய்தியை வெளியிட்டுள்ளன.
மேலும் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட நாங்கள் தயக்கம் காட்டுவதாக சில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆளும் கட்சியின் தூண்டுதலின்பேரில் இத்தகைய செய்திகள் வெளியிடப்படுவதை சிபிஎம் கடுமையாக கண்டிக்கிறது.
எத்தகைய சக்தியையும் எதிர்க்கும் வல்லமையும் உறபதியும் கொண்ட சிபிஎம் கட்சியை அரசியல் உள்நோக்கத்தோடு சிறுமைப்படுத்த எண்ணுவதை ஊடகங்கள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
சிபிஎம் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுக தலைமையிடம் தரப்பட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications