அதிமுக-மதிமுக: பாதி சிக்கல் தீர்ந்தது!-மீதி தொடர்கிறது!!

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுகவுடன் ஒரு தொகுதி தொடர்பாக ஏற்பட்ட மோதலால் தான் திடீரென அதிமுக கூட்டணிக்குப் போனார் வைகோ.
இந் நிலையில் இப்போது அங்கேயும் சீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பாமக புயல் மாதிரி வந்து 7 தொகுதிகளை அள்ளிக் கொண்டு போய்விட மதிமுகவுக்கு 3 போதுமா என்று கேட்டு 'புரட்சிப் புயலை' துவளச் செய்துவிட்டார் ஜெயலலிதா.
கூட்டணிக்குள் பாமக சேரும் முன்பே தனக்கு குறைந்தது 5 தொகுதியாகவது கிடைக்கும் என நினைத்திருந்தார் வைகோ. பின்னர் பாமக கூட்டணிக்குள் வந்து 7 சீ்ட்களைப் பெற்றபோது தனக்கும் அதே அளவுக்கு இடம் தருவார் அல்லது 6 சீட்டாவது தருவார் என்று எதிர்பார்த்தார்.
இந்த நேரம் பார்த்து மதிமுக தலைவர்களை வரிசையாக திமுக இழுத்துப் போட, உங்க கட்சியில் இருந்து முக்கியமானவங்கள் எல்லோருமே போயிட்டாங்களே.. உங்களுக்கு 3 சீட் போதுமே என்று அதிமுக தரப்பு கேட்டுவிட நொந்து போய்விட்டார் வைகோ.
குறைந்தது 5 சீட் என்று மன்றாட ஆரம்பித்தவரிடம் போனால் போச்சு 4 தர்றேன் என்றார். சரி, தொகுதிகள் குறைந்தாலும் கேட்கும் சீட்டாவது கிடைக்கும் என்று நம்பி லிஸ்டைத் தந்த வைகோவுக்கு பெரும் அதிர்ச்சி.
வட சென்னை இந்திய கம்யூனிஸ்டுக்கு தந்தாச்சு.. திருப்பூர் மார்க்சிஸ்ட் கேட்குது என்று சொல்லி மதிமுகவுக்கு தடமே இல்லாத சில தொகுதிகளைச் சொல்லி அங்கே நில்லுங்க என்று கூறிவிட்டார்.
இதையடுத்து அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுக்கு போவதையே நிறுத்துவிட்ட வைகோ மாற்று வழிகள் குறித்தும் யோசிக்க ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.
கூப்பிட்டால் வர மாட்டீங்குறார்.. நீங்க போய் பாருங்க என்று ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா அனுப்பி வைக்க, அவரிடம் 5 சீட் குடுத்தா தான் ஆச்சு என வைகோ அடம் பிடிக்க.. எங்க கட்சியை ஜோசியக்காரரு 23 இடத்துல நி்க்க சொல்லியிருக்காரு.. பாமகவுக்கு 7 போக, இடதுசாரிகளுக்கு 6 போக மிச்சம் 4 தான் இருக்கு என்று பன்னீர்செல்வம் தனக்கு சொல்லி அனுப்பப்பட்ட தகவலைச் சொல்ல, அப்ப இந்த 4 தொகுதிகள் குடுத்தா ஓ.கே. என்று வைகோ ஒரு சீட்டை நீட்ட.. ,நான் அம்மாகிட்டே பேசிட்டு சொல்றேன் என்று போனவர் இரண்டு நாட்களாக ஆளே வரவேயில்லை. அதிமுகவிடமிருந்து போனும் வரவில்லை.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆள் இல்லாமல் அலையும் பாஜக கூட்டணியில் போய் சேர்ந்துவிடலாமா என்று கூட வைகோ யோசிப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அத்வானியுடனும் வைகோ பேசியுள்ளார்.
இந்தத் தகவல் பாஜகவில் உள்ள அதிமுக ஆதரவு 'அடிப்பொடிகள்' மூலம் ஜெயலலிதாவுக்கு சொல்லப்பட அவருக்கு கடும் கோபம். அதிமுகவுக்கு நெருக்கடி தரவே வைகோ இதைச் செய்திருப்பார் என்கிறார்கள்.
நம்மகிட்ட பேசிக்கிட்டே... அத்வானிகிட்டே பேசுவாரா இவரு என்று ஜெயலலிதா டென்சன் காட்டியதாகத் தெரிகிறது.
இந் நிலையில் வழக்கம்போல தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளைக் கூட்டி, எப்பவுமே நீங்க எடுக்குற முடிவுக்குத் தான் நான் கட்டுப்படுவேன்.. இப்பவும் நீங்க என்ன சொல்றீங்களோ செய்றேன் என்று உணர்ச்சிவசப்பட்ட வைகோவை அவர்கள், ரெண்டு நாள் பார்க்கலாம்னே என்று தேற்றியுள்ளனர். யோசனையோடு அமைதியானார் வைகோ. அதிமுக அழைப்புக்காக காத்திருந்தார்.
மீண்டும் வந்த தூதர்கள்..:
இந் நிலையில் நேற்று இரவு ஜெயலலிதாவின் தூதுவர்களான பன்னீர்செல்வம், ஜெயக்குமார் இருவரும் வைகோவை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர்.
அப்போது விருதுநகர், ஈரோடு, திருப்பூர், ஆரணி, தஞ்சை, தூத்துக்குடி, காஞ்சீபுரம் ஆகிய 7 தொகுதிகளில் 5 தொகுதிகளைத் தருமாறு கோரினார்.
ஈரோடு தொகுதியை மதிமுக ஆட்சி மன்றக்குழுச் செயலாளர் கணேசமூர்த்திக்கும், ஆரணி தொகுதியை மதிமுக பொருளாளர் மாசிலாமணிக்கும், தஞ்சை தொகுதியை துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணனுக்கும், தூத்துக்குடி தொகுதியை துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரைக்கும், காஞ்சீபுரம் தொகுதியை துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், திருப்பூர் தொகுதியை அவைத் தலைவர் துரைசாமிக்கும் தர விரும்புவதாகவும் விளக்கியுள்ளார்.
திருப்பூரை மார்க்சிஸ்ட் கேட்பதால் அந்தத் தொகுதி பற்றி பின்னர் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறிய ஓபியும் ஜெயக்குமாரும் அங்கிருந்தபடியே தொலைபேசியில் போயஸ்கார்டனுடன் பேசிவிட்டு விருதுநகர், தஞ்சை ஆகிய தொகுதிகள் தரத் தயார் என்றனர். (இந் நிலையில் திருப்பூரை மதிமுகவுக்கு விட்டுத் தர சிபிஎம் முன் வந்துவிட்டதாக தகவல் வருகிறது)
ஆனால், ஈரோடு, ஆரணி, தூத்துக்குடி, காஞ்சீபுரம் ஆகிய தொகுதிகளை விட்டுத் தர இயலாது என்று கூறிய அவர்கள அதற்குப் பதிலாக மத்திய சென்னை, நீலகிரி (தனி) ஆகிய 2 தொகுதிகளை தருகிறோம் என்று கூறியுள்ளனர்.
மத்திய சென்னை, நீலகிரிக்கு தன்னிடம் வலுவான கேண்டிடேட் இல்லையே என்று வைகோ கூறியதாகத் தெரிகிறது. இதனால் உடன்பாடு ஏற்படவில்லை.
இந் நிலையில் அதிமுக தர சம்மதித்துள்ள விருதுநகர், தஞ்சாவூர், மத்திய சென்னை, நீலகிரி குறித்து மதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் நாளை விவாதிக்கவுள்ளார். சென்னை விரையுமாறு அவர்களுக்கு உத்தரவு போயுள்ளது.
கட்சி நிர்வாகிகள் சொல்லும் கருத்துக்கு ஏற்ப வைகோ முடிவெடுப்பார் என்று தெரிகிறது. விருதுநகர் தொகுதியில் வைகோவே போட்டியிடலாம் என்கிறார்கள்.
-
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
ஸ்டாலினா? எடப்பாடியா? விஜய்யா? நகர்ப்புறங்களில் யாருக்கு வாக்கு அதிகம்! வெளியான கருத்துக்கணிப்பு -
அதிமுக சார்பில் தேர்தலில் களமிறங்கும் காளியம்மாள்? 3 முறை போட்டியிட்டபோது என்ன ரிசல்ட்? -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
கலவரத்தைத் தூண்டிய பெரியார் ஊர்வலம்..! ‘சோ’ பற்ற வைத்த நெருப்பு.. 1971 தேர்தலில் சாதித்த திமுக! -
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
ராஜீவ்காந்தி பதவி போச்சு..லீக்கான இன்ஸ்டா சாட்! படக்கென பாயிண்டை பிடித்த பாஜக! பின்னணியில் அந்த தலை? -
Rajiv Gandhi: செந்தில் பாலாஜியிடமே முறைத்து கொண்ட ராஜீவ் காந்தி? பதவி மாற்றத்திற்கு இதுதான் காரணமா? -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது?












Click it and Unblock the Notifications