தேயிலை தோட்ட தொழிலாளர் பேச்சுவார்த்தையில் சமரசம்
வால்பாறை: தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் நடந்து வந்த சம்பள பேச்சுவார்த்தை சுமூக முடிவுக்கு வந்துள்ளது. அவர்களுக்கு தினக்கூலியாக ரூ. 115.60 முடிவு செய்யப்பட்டுள்ளது.
வால்பாறை, ஆனைமலை உள்பட கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 45 ஆயிரம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் சமீபகாலமாக சம்பளம் உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் பழனிக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், தொழிலாளர் நலத்துறை துணை கமிஷனர் மாரிமுத்து, கோவை தங்கம் எம்எல்ஏ, திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த வி.பி.சிங்காரவேலு, அண்ணா தோட்ட தொழிலாளர் சங்க மாநில தலைவர் வால்பாறை அமீது மற்றும் தோட்ட அதிபர்கள் சங்கம் சார்பில் திவாரி ராம்குமார், பாலச்சந்தர், அஸ்வின், செரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி முதல் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.115.60 பைசா வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் தினக்கூலியில் ரூ.140க்கு முழு பண பயன்களும் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை தொழிற்சங்கத்தினரும், தோட்ட அதிபர்கள் சங்கத்தினரும் ஏற்றுக் கொண்டனர்.