3வது அணி கூட்டம்-பவார் பங்கேற்கவில்லை
மும்பை: புவனேஸ்வரில் இன்று நடக்கும் மூன்றாவது அணியின் கூட்டத்தில் விமான கோளாறு காரணமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கலந்து கொள்ளவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இடம்பிடித்துள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரசுக்கு 26, தேசியவாத காங்கிரஸ் 22 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் சரத்பவார் இன்று ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் நடக்கவிருந்த மூன்றாவது அணி கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் பிரதம வேட்பாளராக மன்மோகனை ஏற்றுக்கொள்ள முடியாது என இவர் கூறியிருந்ததை அடுத்து அவர் மூன்றாவது அணியில் சேரப் போவதாக பேச்சு அடிபட்டது.
சந்திரபாபு நாயுடு, பிரகாஷ் காரத் ஆகியோருடன் ஒரே மேடையில் அமர இவர் போட்ட திட்டத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இதன்மூலம் சரத்பவார் கூட்டணிக்கு துரோகம் செய்வதாக கூறியது.
அவர் மூன்றாவது அணி கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் சரத்பவாரின் புவனேஸ்வர் பயணம் திடீரென் ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து கட்சி தொடர்பாளர் மதன் பப்னா கூறுகையில்,
சரத்பவார் செல்லவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவரது ஒரிஸ்ஸா பயணம் ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.
சரத்பவார், புவனேஸ்வர் செல்வதற்கு மாற்று வழிகளை உபயோகித்திருக்கலாமே என்ற கேள்விக்கு மதன் பப்னா பதில் சொல்ல மறுத்துவிட்டார்.