23 தமிழக மீனவர்களைக் கடத்தி இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம்: இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்களையும், அவர்களது 6 படகுகளையும் கடத்திச் சென்று விட்டது இலங்கைக் கடற்படை. இதனால் ராமேஸ்வரம் பகுதியில், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராமேசுவரத்தை சேர்ந்த மாரியப்பன், கருணாமூர்த்தி, உள்பட 23 மீனவர்கள் நேற்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை நோக்கி 5 அதிநவீன படகுகளில் இலங்கை கடற்படையினர் மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்கள் வானத்தை நோக்கி சுட்டபடி தமிழக மீனவர்களின் 6 படகுகளையும் சுற்றி வளைத்தனர்.
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 23 மீனவர்களையும் 6 படகுகளுடன் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு ஊர்க்காவல் படை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலில் வைத்தனர்.
தப்பித்துக் கரை திரும்பிய மற்ற மீனவர்கள் இதுகுறித்து ஊருக்குள் தெரிவித்தனர். இதையடுத்து மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட மீனவர்களை உடனடியாக மீ்ட்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications