காங். வேட்பாளர் பட்டியல்.. டெல்லிக்கு 'காவடி'!!
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸாரிடமிருந்து நேற்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. நேற்றும் இன்றும் ஏராளமான பேர் விருப்ப மனுக்களை அளித்தனர்.
விருப்ப மனுக்களைப் பெற்ற பின்னர் மேலிடம் நியமித்த ஐவர் குழு கூடி ஆலோசித்து, பரிசீலித்து வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும். பின்னர் இதை எடுத்துக் கொண்டு தங்கபாலு டெல்லி சென்று மேலிடத் தலைவர்களை சந்திப்பார். காரணம், காங்கிரசை பொறுத்தவரை சத்தியமூர்த்தி பவனுக்கு 'பினாயில்' பாட்டில் வாங்குவது கூட டெல்லியில் தான் முடிவாகும்..
அவர்களுடன் இறுதி ஆலோசனை நடத்திய பின்னர் வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில் வெளியிடுவார்கள். ஏற்கனவே வாசன், இளங்கோவன், ப.சிதம்பரம், தங்கபாலு, பிரபு உள்ளிட்ட பல்வேறு கோஷ்டிகளைச் சேர்ந்த தலைவர்கள் தத்தமது ஆட்களுக்கான தொகுதிகளை அடையாளம் கண்டு குலாம் நபி ஆசாத்துடன் தொடர்பு கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனுத்தாக்கல் முடிய ஓரிரு நாட்கள் இருக்கும்போதுதான், அதாவது கடைசி நேரத்தில்தான் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்கும். அப்போதுதான் கோஷ்டிச் சண்டையைத் தவிர்க்க முடியும் என காங்கிரஸ் கருதுகிறது. எனவே கடைசி நேரத்தில்தான் வேட்பாளர்கள் யார் என்பது தெரிய வரும்.
நாளை முதல் அதிமுக நேர்காணல்...
மற்றொரு முக்கிய கட்சியான அதிமுகவில் நாளை முதல் நேர்காணல் நடக்கிறது.
அதிமுக தலைமையகத்திற்கு அருகில் உள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்தில் ஜெயலலிதா தலைமையில் நேர்காணல் நடத்தப்படுகிறது.
2 நாட்கள் இந்த நேர்காணல் நடைபெறுகிறது. இதையடுத்து வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிடுவார்.
இந்த முறை வெற்றிக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதால் வேட்பாளர்களை மிகக் கவனமாக தேர்வு செய்யவுள்ளார் ஜெயலலிதா. விருப்ப மனு கொடுத்துள்ளவர்கள் இணைத்துள்ள அவர்களது ஜாதகத்தையும் பார்த்து யாருக்கு நட்சத்திரம் சிறப்பாக உள்ளதோ அவர்களுக்கே சீட் கிடைக்கும்.
கம்யூனிஸ்ட் கட்சிகள்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களைத் தேர்வு செய்து விட்டதாக தெரிகிறது. விரைவில் அது தனது வேட்பாளர்களை அறிவிக்கும். சிபிஎம்மும் தொகுதிகளைப் பெற்று விடட்டும் என்று அது காத்திருப்பதாக தெரிகிறது.
தேமுதிக..
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நான்கு கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து விட்டார். இதுவரை 33 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இதுவரை அவர் அறிவிக்கவில்லை.
இருப்பினும் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் விஜயகாந்த். தமிழக அரசியல் தலைவர்களிலேயே முறைப்படி பிரசாரத்தைத் தொடங்கி படு வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் முதல் தலைவர் விஜயகாந்த்தான் என்பது குறிப்பிடத்தக்கது.