மதிமுகவுக்கு வேறு தொகுதிகள்-சிக்கல் தீருகிறது?: வைகோவுடன் ஜெ பேச்சு

முதலில் கேட்ட எண்ணிக்கையை அதிமுக மறுத்தது. பின்னர் விரும்பிய தொகுதிகளையும் மறுத்தது. தற்போது இவ்வளவுதான் தர முடியும் என்ற அளவுக்கு அதிமுக இறுக்கமாகி விட்டது.
விருதுநகர், திருப்பூரை கோரி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வைகோவுக்காக அதை விட்டுத் தர முன் வந்தது. இதனால் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சிபிஎம் அதிமுக இடையே குழப்பம் தீர்ந்து விட்டது. சிபிஎம்முக்கு மதுரை, திண்டுக்கல், திருப்பூர் தொகுதிகள் தரப்படுகிறது.
ஆனால், மதிமுகவுக்கு அவர்கள் கேட்ட ஆரணி, ஈரோடு, காஞ்சீபுரம், திருப்பூர், தஞ்சாவூர், விருதுநகர், பொள்ளாச்சி (இதில் ஐந்தை கேட்கின்றனர்) ஆகிய தொகுதிகளில் விருதுநகர், தஞ்சை, அவர்கள் கேட்காத மத்திய சென்னை, நீலகிரி (தனி) ஆகிய 4 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. திருப்பூர் பற்றி பின்னர் பேசலாம் என்று கூறிவிட்டது.
இந் நிலையில், மதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தை வைகோ இன்று கூட்டியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள கட்சித் தலைமையகமாக தாயகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் மத்திய சென்னை தொகுதியை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று வைகோவிடம் மதிமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
வைகோவுடன் தொலைபேசியில் ஜெ பேச்சு:
வைகோ இவ்வாறு அவசர கூட்டம் கூட்டியது தெரியவந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்றிரவு வைகோவுடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது தனக்கு 5 தொகுதிகள் தரப்பட வேண்டும், அதில் திருப்பூரும் ஒன்று வைகோ வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நாளை (சனிக்கிழமை) இருவரும் நேரில் சந்தித்துப் பேசலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல மார்க்சிஸ்ட் தலைவர்களும் ஜெயலலிதாவை நாளை சந்திக்கின்றனர்.
மொத்தமாக வேறு தொகுதிகள்..?:
இந் நிலையில், இதுவரை சொன்ன தொகுதிகளை விட்டுவிட்டு விருதுநகர், காஞ்சீபுரம், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளை மதிமுகவுக்கு ஒதுக்க ஜெயலலிதா முன் வந்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
எந்தப் பிரச்சனையும் இல்லையே.. இது வைகோ:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய வைகோ,
நேற்று நான் நீதிமன்றத்திற்கு வந்தபோது தொகுதி பங்கீடு குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாததால் வைகோ மவுனம், வைகோ அதிருப்தி என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக சுமூகமாக பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் நல்ல முடிவு ஏற்படும். எங்கள் கூட்டணி குறித்து தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகிறார்கள். இதில் உண்மை எதுவும் இல்லை என்றார்.
இதற்கிடையே, அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நாளை காலை 10 மணிக்கு அதிமுக தலைமையகத்திற்கு அருகில் உள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்தில் ஜெயலலிதா தலைமையில் நடைபெறுகிறது.
நாளை காலையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திக்கும்போது தொகுதி உடன்பாடு எட்ட்பட்டுவிடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications