காங்கிரஸ்-டிக்கெட் கேட்டு ஆயிரக்கணக்கில் மனுக்கள்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் டிக்கெட் கேட்டு ஆயிரக்கணக்கானோர் மனு செய்துள்ளனராம்.
தமிழகத்தில் 15 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் காஞ்சீபுரம் (தனி), ஆரணி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தென்காசி (தனி), நெல்லை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
கடந்த முறை புதுவையை பாமகவிடம் இழந்த காங்கிரஸ் இம்முறை திமுக கூட்டணியில் அதை வாங்கியுள்ளது.
தமிழக காங்கிரஸாரிடம் கடந்த 2 நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. போட்டி போட்டுக் கொண்டு ஏகப்பட்டோர் மனுக்கள் கொடுத்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
அல்வா கொடுத்த நிர்வாகிகள்..
நெல்லை தொகுதிக்கு விருப்ப மனு கொடுக்க வந்த நிர்வாகிகள் மனுவுடன் கூடவே அல்வாவையும் கொடுத்துள்ளனர்.
ஆனால் விருப்ப மனுக்களைப் பெற்றவர்கள், அல்வாவை மட்டும் தயவு செய்து வேண்டாமே என்று மறுத்து விட்டனராம்.
நெல்லை தொகுதியில் தனுஷ்கோடி ஆதித்தன் எம்.பி. போட்டியிட விருப்பம் தெரிவித்து நெல்லை சாமி என்பவர் விண்ணப்பித்தார்.
புக் கொடுத்த டைகர் சம்சுதீன்...
விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் டைகர் சம்சுதீன், தனது 28 ஆண்டு கால அரசியல் வரலாற்றை விளக்கி, 700 பக்க சாதனைப் புத்தகத்தை அச்சடித்து, அதை விருப்ப மனுவுடன் இணைத்து விண்ணப்பித்துள்ளாராம்.
பாராளுமன்ற தேர்தலில் அதிகளவில் பெண்கள் போட்டியிட செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் தலைமையில் மகளிரணியினர் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனத்தை சந்தித்து வலியுறுத்தினர்.
திருச்சி தொகுதிக்கு சாருபாலா தொண்டைமான் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவர்கள் மனுசெய்தனர்.
வாங்கப்பட்ட மனுக்களை அப்படியே கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப் போவதாகவும், அங்கு வைத்து பரிசீலித்து, வேட்பாளர்களைத் தேர்வு செய்யவுள்ளதாகவும் மாநில காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.