விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்- ஜெ.
சென்னை: அதிமுக வேட்பாளர் நேர்காணல் முடிந்துவிட்டது. வெகு விரைவில் முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்க கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா நேற்று மதியம் 3.15 மணிக்கு கட்சி அலுவலக்த்துக்கு வந்தார். அவருக்கு பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
விருப்ப மனு செய்தவர்களுடன் அந்த தொகுதியை சேர்ந்த எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், என சுமார் 2500 பேர் வந்திருந்தனர். அவர்களில் மூன்று அல்லது நான்கு தொகுதிகளை சேர்ந்தவர்களை ஒரு குழுவாக அமைத்து மொத்தம் 11 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அந்த 11 குழுவினர் பகுதி வாரியாக மூன்று இடங்களில் அமர வைக்கப்பட்டிருந்தனர். முதலில் நெல்லை, குமரி, தேனி, தூத்துக்குடி தொகுதிகளை உள்ளடக்கிய குழுவினர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து மற்ற குழுவினரும் நேர்காணலுக்கு சென்று வநதனர். அப்போது ஜெயலலிதா அவர்களுக்கு சில சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில்,
உங்கள் எல்லோரையும் சந்தித்து பேச வேண்டும், உங்கள் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால் இருப்பது 40 பாராளுமன்ற தொகுதிகள் தான்.
அதிலும் பெரும்பாலான தொகுதிகளை தோழமை கட்சிகளுக்கு கொடுக்க இருக்கிறோம். எஞ்சியிருக்கும் 20 முதல் 25 தொகுதிகளில் தான் நாம் போட்டியிட வேண்டியுள்ளது.
எனவே இந்த 20 அல்லது 25 பேருக்கு தான் வாய்ப்பு வழங்கக் கூடிய நிலை உள்ளது. கழகம் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை ஆட்சிமன்றக் குழு தான் தேர்வு செய்ய இருக்கிறது.
சீ்ட் கிடைக்காதவர்களுக்கு வேறு பொறுப்பு...
யாரை வேட்பாளராக அறிவித்தாலும், கூட்டணி கட்சியினருக்கு உங்கள் தொகுதியை ஒதுக்கியிருந்தாலும் நீங்களே போட்டியிடுவதாக கருதி நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
மத்தியில் புதிய அரசு அமைந்தபின், தமிழ்நாட்டுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்போது 150 தொகுதிகளுக்கு மேல் நாம் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். அடுத்து உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும். வாரிய தலைவர்கள் இப்படி பல வாய்ப்புகள், பல பொறுப்புகள் உங்களுக்கு காத்திருக்கின்றன.
ஓட்டு கூடினால் பதவி கூடும்...
இந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குசாவடி வாரியாக நமது கூட்டணிக்கு பதிவாகும் வாக்குகளை நான் கவனிப்பேன். இதில் அதிக வாக்குகள் பதிவாகும் பகுதிக்கான பொறுப்பாளர்களுக்கு சிறந்த பதவிகள் காத்திருக்கின்றன.
எனவே நீங்கள் சோர்ந்து விடாமல் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்காக கடினமாக பாடுபட வேண்டும் என்றார் ஜெயலலிதா.
நேர்காணலை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு வெளியில் வந்த ஜெயலலிதா பத்திரிகையாளர்களிடம் கூறுகையி்ல், வேட்பாளர் பட்டியலை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றார்