கருணாநிதி பேரன் அறிவுநிதி கச்சேரி போஸ்டர் கிழிப்பு-போலீசில் புகார்
செனனை: இசை சங்கமம் என்ற பெயரில் கருணாநிதியின் பேரன் அறிவுநிதி நடத்தும் நிகழ்ச்சிக்காக அவரது பெரிய பெரிய படங்களுடன் சென்னை நகரம் முழுக்க ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் அறிவுநிதி நேரில் வந்து புகார் கொடுத்தார்.
பத்மாவதி அம்மையார் அறநிலை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் இசை சங்கமம் நிகழ்ச்சி, சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளி அரங்கில் இன்று மாலை நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு முதல்-அமைச்சர் கருணாநிதியின் பேரனும் மு.க.முத்துவின் மகனும், பாடகருமான டாக்டர் மு.க.மு.அறிவுநிதியின் படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள், பேனர்கள் நந்தனம், அடையாறு, சைதாப்பேட்டை, அண்ணாசாலை உட்பட பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று 20-க்கும் மேற்பட்ட அவரது போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு இருந்தன. சில போஸ்டர்களில் அவரது முகத்தை மட்டும் வெட்டி எடுத்திருந்தனர். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் அறிவுநிதி, தனது ஆதரவாளர்களுடன் வந்து நேற்று புகார் கொடுத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இசை சங்கமம் நிகழ்ச்சி ஒரு அரசியல் சார்பற்ற விழா. இதற்காக எனது 'ரசிகர் மன்றங்கள்', எனது படம் போட்டு வைத்திருந்த போஸ்டர்களை கிழித்து, பேனர்களை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சேதப்படுத்தி விட்டனர். யார் மீதும் எனக்கு சந்தேகம் இல்லை. சில சமூக விரோதிகள்தான் இதைச் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, வைரமுத்து, பாலமுரளி கிருஷ்ணா, டி.எம்.எஸ். போன்ற இசை மேதைகள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு யார் இப்படி இடையூறு செய்திருக்க முடியும் என்பது தெரியவில்லை. என்ன நோக்கத்தில் அவர்கள் அதை செய்திருப்பார்கள் என்பது தெரியவில்லை.
இசை சங்கமம் நிகழ்ச்சிக்கு பங்கம் வரக்கூடும் என்ற அச்சம் இருப்பதால் பாதுகாப்பு கேட்டேன். போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் போஸ்டரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் உறுதி அளித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications