சென்னை: பிளாட் விலையை மேலும் குறைத்த டிஎல்எப்!
சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் கார்டன் சிட்டி எனும் பெயரில் 3000-க்கும் மேற்பட்ட ஃபிளாட்டுகளைக் கட்டி வருகிறது முன்னணி தனியார் வீட்டு வசதி நிறுவனமான டிஎல்எப்.
இவற்றின் விலை சதுர அடிக்கு ரூ.3000-க்கும் மேல் நிர்ணயிக்கப்பட்டது. பெரும்பாலான வீடுகளுக்கு பணம் செலுத்தப்பட்ட நிலையில், பொருளாதார வீழ்ச்சி காரணமான ரியல் எஸ்டேட் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதனால், டிஎல்எப்பில் வீடு வாங்கிய பலர் வேலை இழந்து தவித்தனர். இன்னும் சிலரோ, வீட்டின் விலையைக் குறைக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினர்.
எனவே, பணத்தைத் திரும்பக் கேட்ட அனைவருக்கும் பணம் கொடுக்க முடிவு செய்துவிட்ட டிஎல்எப், இப்போது அவர்களுக்கு காசோலைகளை அனுப்பி வருகிறது. மேலும் சென்னை புராஜக்டில் ஃபிளாட்டுகளின் விலையை 20 சதவிகிதம் வரை குறைப்பதாக அறிவித்தது.
இப்போது சதுர அடிக்கு மேலும் ரூ.200 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது டிஎல்எப். சரியான நேரத்தில் தவணையை தவறாமல் கட்டியவர்களுக்கு மட்டும் இந்தச் சலுகை பொருந்தும் என அறிவித்துள்ளது.
ஏற்கெனவே பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள டிஎல்எப் வீட்டு வசதித் திட்டத்திலும் 30 முதல் 40 சதவிகிதம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.