வீட்டில் கம்ப்யூட்டர் வெடித்து டிசிஎஸ் ஊழியர் பலி?
சென்னை: வீட்டில் இருந்த தனது கம்ப்யூட்டர் வெடித்ததில் சென்னை டிசிஎஸ் ஊழியர் ஒருவர் மரணமடைந்துள்ளார். வினோதமான இந்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரையை சேர்ந்த விஜயகுமார் (28) சென்னையில் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து வேளாச்சேரியில் உள்ள தெலுங்கு பிராமணர் தெருவில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் கம்ப்யூட்டரி்ல் வேலை பார்த்து கொண்டிருந்த போது, கம்ப்யூட்டர் திடீரென்று வெடித்ததை அடுத்து உட்கார்ந்த நிலையில் உடல் கருகி இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது விஜயகுமாருடன் அவரது நண்பர் ராம் பிரசாத் என்பவர் இருந்துள்ளார்.
வீட்டில் குளித்து கொண்டிருந்த திடீரென்று ஏதோ வெடி சத்தம் கேட்டது. வந்து பார்க்கையில் கம்ப்யூட்டர் முழுவதுமாக எரிந்து போயிருந்தது. விஜயகுமார் நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் பிணமாக கிடந்ததார் என ராம்பிரசாத் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
இது விபத்தா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.