3 லட்சம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - மு.க.அழகிரி
மதுரை: தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். மதுரை தொகுதியில் நான் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மதுரை லோக்சபா தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி நேற்று சென்னையிலிருந்து மதுரை திரும்பினார்.
விமான நிலையத்தில் அழகிரிக்கு திமுகவினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
அவரை செய்தியாளர்கள் சந்தித்தபோது, தேர்தல் வியூகம் குறித்து கட்சிப் பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும். தென்மாவட்டங்கள் முழுவதும் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
பல தேர்தல்களில் வெற்றி பெற்ற அனுபவம் உள்ளது. எனவே மதுரையில் குறைந்தது 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பேன்.
மதுரை தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற வைத்தால், எனது வாழ்நாளையே இந்த தொகுதிக்கு ஒப்படைப்பேன். தொகுதி முழுவதும் உள்ள குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வேன் என்றார் அழகிரி.