நாளை வி. சிறுத்தைகள் வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களின் பெயர்களும் நாளை அறிவிக்கப்படும் என கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நேற்று திருமாவளவன், முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன், ரவிக்குமார் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோரும் திருமாவுடன் வந்திருந்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 8-ம் காலை 10 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
அப்போது, விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள்.
விடுதலை சிறுத்தைகள் செயல் வீரர்கள் கூட்டம் 10-ந் தேதி முதல் நடத்தப்படும். தோழமை கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறது.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கியும், மாநில உரிமை, நதிநீர் இணைப்பு, ஈழத்தமிழர் பிரச்சினை ஆகியவற்றை மக்கள் முன்பு வைத்து பிரசாரம் செய்வோம் என்றார் திருமாவளவன்.