சத்யம் மோசடி குற்றப்பத்திரிகை தாக்கல்; நிரூபணமானால் ராஜுவுக்கு ஆயுள் தண்டனை!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு மீது செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ.
பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வந்த ராமலிங்க ராஜு மீது பல்வேறு பிரிவுகள் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் செக்ஷன் 427ன்படி அவருக்கு ஆயுள் தண்டனை கூட விதிக்கப்படலாம். மதிப்புமிக்க உயில் அல்லது ஆவணங்களை மோசடி செய்த குற்றத்துக்கு வழங்கப்படும் தண்டனை இது.
இந்த குற்றப்பத்திரிகையில் ராஜுவைத் தவிர, அவரது தம்பி ராமராஜு, சத்யம் முன்னாள் சிஎப்ஓ வாட்லாமணி, சத்யம் நிறுவன கணக்குகளை தணிக்கை செய்த பிரைஸ்வாட்டர்கூப்பர் ஹவுஸ் நிறுவனத்தின் எஸ் கோபாலகிருஷ்ணன் மற்றும் தல்லூரி சீனிவாஸ் ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட டி வெங்கடபதி ராஜி மற்றும் ஸ்ரீசைலம் ஆகியோரும் இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளனர்.
ராஜூவின் இன்னொரு சகோதரர் சூர்யநாராயண ராஜுவை ஒன்பதாவது குற்றவாளியாக இதில் சேர்த்துள்ளது சிபிஐ.
இவரைத் தவிர மற்ற எட்டு பேரும் சஞ்சலகுடா சிறையில் உள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்காக 1500 முக்கிய ஆவணங்கள், 65000 பக்க இதர ஆவணங்கள் மற்றும் 432 சாட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தது சிபிஐ.












Click it and Unblock the Notifications