ஷூ வீசிய ஜர்னைல் சிங்குக்கு அகாலி தளம் சீட்!
1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையான சமயத்தில் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர்
சமீபத்தில் இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தைனிக் ஜார்கன் பத்திரிக்கை நிருபர் ஜர்னைல் சிங், சிதம்பரம் மீது தனது ஷூவை கழற்சி வீசினார்.
தைனிக் ஜார்கன் நடவடிக்கை...
ஷூ வீசியதை அவர் வேலை பார்க்கும் தைனிக் ஜார்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஷூ எறிந்தது அவரது சொந்த விருப்பம். இதற்கும் நிறுனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இவரது செயல் எங்கள் நிறுவனத்தின் நடமுறை, பாரம்பரியம், விதிமுறை மற்றும் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். அவர் மீது நடவடிக்கை
எடுக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் கூறுகையில்,
ஜர்னைல் மிகப்பெரிய வீரச்செயலை செய்துள்ளார். அவரது செய்கை எங்களை பெருமைப்படுத்துகிறது. அவருக்கு அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அளிப்போம்.
இந்த சம்பவத்தால் அவருக்கு வேலை போனால், அவருக்கு சிரோமணி குருதுவாரா பிரபந்தக் கமிட்டி வேலை கொடுக்கும். அவரது குடும்பத்தை கவனித்து கொள்ளும் என்றார்.
மன்னித்த சிதம்பரத்துக்கு தாயார் நன்றி...
இந்நிலையில் ஜர்னைல் சிங்கின் தாயார் கூறுகையில், இந்த சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போல் மீண்டும் செய்யாதே என அறிவுறுத்தினோம். இது தவறு என அவனுக்கு எடுத்து கூறியுள்ளோம். அவனை விடுவித்ததற்கு சிதம்பரத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
ஜர்னைல் சிங்கின் சகோதரி கூறுகையி்ல், அவர் அமைதியானவர். திடீரென்று ஏன் அப்படி செய்தார் என தெரியவில்லை. அவன் செய்தது தவறு தான். அவனை விடுவித்த அரசுக்கு நன்றி தெரிவித்து
கொள்கிறேன் என்றார்.
சிதம்பரத்துடன் கருணாநிதி பேச்சு:
இந் நிலையில் ஷூ வீசப்பட்டது குறித்து ப.சிதம்பரத்திடம் முதல்வர் கருணாநிதி தொலைபேசியில் கேட்டறிந்தார். அப்போது தனது கவலையை தெரிவித்த கருணாநிதி எதிர்காலத்தில் எச்சரிக்கையாகவும், உங்களது பாதுகாப்பு விஷயத்தில் உரிய கவனம் செலுத்துமாறும் கூறினார்.
இதற்கு நன்றி தெரிவித்த சிதம்பரம், நான் இந்த சம்பவத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.
டைட்லருக்கு சீட் வாபஸ்?:
இந் நிலையில் சீக்கியர்களின் கோபத்தை மனதில் கொண்டு ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன்குமார் ஆகியோருக்கு மக்களவைத் தேர்தலில் டெல்லியில் போட்டியிட தரப்பட்ட சீட்களை காங்கிரஸ் வாபஸ் பெறும் என்று தெரிகிறது.
டைட்லரோடு சேர்த்து குற்றம் சாட்டப்பட்டவர் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.