பல நாடுகளில் தமிழர்கள் போராட்டம்-இலங்கை டென்ஷன்
கொழும்பு: உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் நடத்தி வரும் எழுச்சிமிகு போராட்டங்களால் இலங்கை அரசு கடுப்படைந்துள்ளது. தமிழர்கள் போராட்டம் நடத்துவதை அனுமதிக்கும் நாடுகளை இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொக்கல்லகாமா விமர்சித்துள்ளார்.
உலக நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் பெரும் போராட்டங்களில் குதித்துள்ளனர். ஆயிரக்கணக்கில் கூடி இவர்கள் நடத்தும் போராட்டங்களால், இலங்கைப் பிரச்சினையும், தமிழர்கள் இனப்படுகொலையும் உலகம் முழுவதும் வெட்டவெளிச்சமாகி வருகிறது.
தமிழர்களின் இந்தப் போராட்டங்களுக்கு கிடைத்து வரும் ஆதரவும், உலக நாடுகள் இந்தப் போராட்டங்களை அனுமதிப்பதற்கும் இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா பேசுகையில்,
அனைத்துலகத்திலும் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கு பேரணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பேரணிகளின் போது விடுதலைப் புலிகளின் கொடிகளையும் சின்னங்களையும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனின் படத்தையும் தாங்கி செல்கின்றனர்.
இந்த பேரணிகள் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட நாடுகளில் நடைபெறுகின்றன. ஆனால் அங்கு விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது காகிதத்தில் மட்டுமே உள்ளன என கோபாவேசமாக பேசினார்.
பாதுகாப்பு வளையத்தில் 31 தமிழர்கள் பலி...
இதற்கிடையே பாதுகாப்பு வளையப் பகுதியில் இலங்கை ராணுவம் எறிகணை மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 14 குழந்தைகள் உட்பட 31 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
மாதளன், அம்பலவன், பொக்கனை, இடைக்காடு, முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக புலிகள் ஆதரவு இணையத் தளம் கூறுகிறது.
ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தும் ராணுவம்?:
இந் நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் தங்களுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான லாரன்ஸ் இந்த புகாரைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த படத்தில் இருந்த புலிகளின் உடல்களை பார்க்கும்போது அவர்கள் ரசாயன ஆயுத தாக்குதலில் உயிரிழந்திருப்பதை அறிய முடியும் என்றும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
ரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவதற்கு உலக நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் இலங்கை அரசு ரகசியமாக இந்த ஆயுதங்களை வாங்கி பயன்படுத்தி வருவதாக புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications