சரணடைக-புலிகளுக்கு இலங்கை எச்சரிக்கை
கொழும்பு: தோல்வி உறுதியாகி விட்டது. எனவே விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும் என இலங்கை அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகையில், விடுதலைப் புலிகள் தோல்வி அடைவது உறுதியாகி விட்டது. அவர்களால் தப்ப முடியாத அளவுக்கு ராணுவம் சுற்றி வளைத்துள்ளது.
எனவே அவர்கள் உடனடியாக சரணடைய வேண்டும். தங்களது பிடியில் உள்ள அப்பாவிகளை பாதுகாப்புப் பகுதிகளுக்கு அனுப்ப அவர்கள் முன்வர வேண்டும்.
போர் முறையில் அல்லாமல், வேறு முறைகளில் அப்பாவி மக்களை புலிகளிடமிருந்து விடுவிக்க ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், ராணுவத்தின் இறுதி தாக்குதல் உடனடியாக நடைபெறாது. நிதானமாக செயல்பட திட்டமிட்டுள்ளோம். அப்பாவி மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்ட பின்னரே இறுதித் தாக்குதலை நடத்துவோம்.
இதில் அவசரம் காட்ட நாங்கள் விரும்பவில்லை. தற்போது விடுதலைப் புலிகள் முற்றாக குறுகிய இடத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் பிடிவாத நிலை மாறும் என நம்புகிறோம்.
மக்களுக்கு மத்தியில் அவர்கள் உள்ளனர். எனவே இறுதித் தாக்குதலை அவசரப்பட்டு எடுத்தால், உயிரிழப்பு அதிகமாகி விடும்.
எனவே முதலில் மீட்பு பின்னர் இறுதித் தாக்குதல் என்று திட்டமிட்டுள்ளோம் என்றார்.
ஆனால் மக்களோடு மக்களாக விடுதலைப் புலிகள் கலந்திருப்பதால் ராணுவத்தின் நடவடிக்கை எத்தகையதாக இருந்தாலும் அதனால் மக்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என நடுநிலையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புலிகளின் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு:
இதற்கிடையே, புதுக்குடியிருப்புப் பகுதியில் விடுதலைப் புலிகள் வைத்திருந்த பெருமளவிலான ஆயுதங்களை ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
ராணுவத்தையே அதிர்ச்சி அடைய வைக்கும் வகையி்ல் அதி நவீன ஆயுதங்கள் குவியல் குவியலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஐ-காம் கருவி, ஐஇடி வெடிகுண்டு உள்ளிட்டவற்றை ராமநாதபுரம் என்ற இடத்திலிருந்து ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
விஸ்வமடு, கல்மடுகுளம், பலமத்தளன் ஆகிய பகுதிளில் தற்கொலைப் படை விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் உடைகள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை சிக்கியுள்ளன.
இதுதவிர 80 மார்ட்டர் குண்டுகள், 15 60 எம்எம் மார்ட்டர் குண்டுகள், 3 ராக்கெட் புரபல்லர் துப்பாக்கிகள் உள்ளிட்ட பெருமளவிலான ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், தோட்டாக்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.