காது குத்து..கிடா வெட்டு..கறிச்சோறு-அதிகாரிகள் கண்காணிப்பு
மதுரை: மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்களில் காது குத்து விழா என்ற பெயரில் வாக்காளர்களுக்கு கறி விருந்து அளிப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மேறகொண்டுள்ளனர்.
தேர்தலையொட்டி வாக்காளர்களைக் கவரும் வகையில் கறி விருந்து அளிப்பது, பணம் தருவது, நீர் மோர்ப் பந்தல்களை அமைப்பது உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது போல கறி விருந்துக்கு ஏற்பாடு செய்து வாக்காளர்களுக்கு சாப்பிட்டு முடித்ததும் பணம் கொடுப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த தடையை பிறப்பித்தது தேர்தல் ஆணையம்.
ஆனால் நம்மவர்கள்தான் டெக்னிக்கலாக ஏமாற்றுவதில் கில்லாடிகள் ஆயிற்றே. கறிச் சோறு போட புது உத்தியைக் கண்டுபிடித்துள்ளனர்.
காது குத்து விழா என்ற பெயரில் ஊரைக் கூட்டி விருந்து வைத்து வருகிறார்களாம். தேர்தல் அதிகாரிகளுக்கு இந்தத் தகவல் போயுள்ளது.
இதைடுத்து மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களில் நடைபெறும் விழாக்கள், கல்யாணங்கள், காதுகுது உள்ளிட்டவற்றை கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல, அதிக அளவில் காது குத்து, மொட்டை போடும் வைபவங்கள் நடந்தேறும், மதுரை பாண்டி கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், தேனி வீரப்ப அய்யனார் கோயில், சுருளி தீர்த்தம் மற்றும் ஊர் ஒதுக்குபுறங்களில் உள்ள காவல் தெய்வங்களின் கோயில்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோயில் நிர்வாகிகளுக்கு ஒரு உத்தரவும் பிறப்பித்துள்ளனர். அதில் விழா நடத்துவது யார், அவர்களின் பெயர் ஊர், அரசியல் கட்சி பிரமுகரா என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications