போர் நிறுத்தம் கோரி கருணாநிதி தலைமையில் சென்னையில் நாளை பேரணி
சென்னை: இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் பேரணி நடைபெறுகிறது.
இலங்கையில் புதுக்குடியிருப்பை ராணுவம் பிடித்து விட்ட நிலையில் 2 லட்சம் மக்கள் வசிக்கும் பாதுகாப்பு வளையப் பகுதியைத் தாக்க இலங்கை ராணுவம் தயாராகி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இதை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த நிலையில், தமிழர்களைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நாளை பிரம்மாண்ட பேரணி நடக்கிறது.
மாலை 4 மணிக்கு தொடங்கும் பேரணி மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் வரை நடக்கிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் உருக்கமிகு குரலை மதித்து இலங்கை அரசு போரை நிறுத்த வலியுறுத்தி நடக்கும் பேரணியில், கட்சி வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
சோனியா, பிரதமர், ப.சிக்கு தந்தி..
மேலும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் முதல்வர் கருணாநிதி தந்தி அனுப்பியுள்ளார்.
அதில், இலங்கையில் தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவதில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்து அமைதிப் பேச்சு தொடங்குவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கும் முதல்வர் தந்தி அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications