சமாதான முயற்சி-ஜெ தூதராக வைகோவுடன் தா.பாண்டியன் சந்திப்பு
முதலில் 2 தொகுதி தான் என்று ஆரம்பித்து வைகோ முறைப்பு காட்டியபின் அதை 3 பின்னர் 4 ஆக உயர்த்தினார் ஜெயலலிதா. ஆனால், 5 தொகுதிகள் வேண்டும் என்று கூறிவிட்டார் வைகோ.
இதையடு்த்து விருதுநகர் மற்றும் மதிமுகவுக்கு பலமில்லாத 4 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா. இதை வைகோ ஏற்கவில்லை
இதனால் கூட்டணியில் சிக்கல் நீடித்து வருகிறது. தனித்துப் போட்டியிடும் முடிவுக்கும் வைகோ வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று வைகோவுக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், தான் சொன்ன தொகுதிகளைத் தருவதாக பேகஸ் அனுப்புங்கள் வருகிறேன் என்று கூறிவிட்டார் வைகோ.
இதையடுத்து ஜெயலலிதா, சகிகலாவின் வேண்டுதலின்பேரில் அவரை சந்தித்தார் தா.பாண்டியன். சென்னை அண்ணாநகரில் உள்ள வைகோவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது.
அப்போது கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுமாறு வைகோவுக்கு தா.பா. அட்வைஸ் செய்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில் வைகோ கோரும் தொகுதிகளைப் பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் கூறியதாகத் தெரிகிறது.
(தா.பாண்டியன் சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் தனக்கு வேண்டிய தொகுதிகளை அந்த ரூட்டிலேயே போய் வாங்கிக் கொண்டுவிட்டார்)
வைகோவுடனான சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பாண்டியன், மரியாதை நிமித்தமாகவே அவரை சந்தித்தேன். விரைவில் சுமூக உடன்பாடு ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தேன் என்றார்.
ஆனால், வைகோ நிருபர்களை சந்திக்கவில்லை.
தா.பா போட்டி?:
இதற்கிடையே வட சென்னையில் தா.பாண்டியன் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏற்கனவே இந்தத் தொகுதியில் இருமுறை வென்றுள்ள பாண்டியனுக்கு தொகுதி அத்துப்படி.
தொழிலாளர்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் இடதுசாரிகளுக்கு எப்போதுமே பலமுண்டு. இதனால் தான் இங்கு திமுக வழக்கமாக தனது தொழிலாளர் சங்கத்தின் தலைவரான குப்புசாமியை நிறுத்தும். ஆனால் இப்போது உடல் நலமில்லாமல் இருப்பதால் குப்புசாமிக்கு பதில் டி.கே.எஸ். இளங்கோவனை நிறுத்தியுள்ளது.
இளங்கோவனுக்கு தொகுதியும் புதிது தேர்தல் அரசியலும் புதிது. தா.பாண்டியனை சமாளிப்பது அவருக்கு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை.