கன்னியாகுமரியில் ஐந்து முனை போட்டி-வெற்றி யாருக்கு?
கன்னியாகுமரி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, பகுஜன் சமாஜ் என அனைத்து கட்சிகளுக்கும் இங்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் தொகுதியில் வெற்றி யாருக்கு என்பது கடைசி வரை இழுபறியாகவே இருக்கும் என தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரிக்கு தொகுதிக்கு ஒரு சிறப்பு பெருமை உண்டு. இங்கு ஜெயிக்கும் கூட்டணி தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் என்பது தான் அது.
இம்முறை இங்கு அதிமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெல்லார்மின், திமுகவின் ஹெலன் டேவிட்சன், பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன், தேமுதிகவின் ஆஸ்டின், பகுஜன் சமாஜ் கட்சியின் சிவகாமி ஐஏஎஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளரான ஹெலன் டேவிட்சன் புதுமுகமாக களமிறக்கப்பட்டுள்ளார். பொது தேர்தலில் நின்று இவருக்கு பழக்கமில்லை என்றாலும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கிகள் இவருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்க்சிஸ்ட் வேட்பளர் பெல்லார்மி்ன் தற்போதைய தொகுதி எம்.பி என்பது அவரது கூடுதல் பலம். கன்னியாகுமரி தொகுதி கேரளாவுக்கு மிக அருகில் இருப்பதால் மற்ற தொகுதிகளை விட இங்கு கம்யூனிஸ்ட் ஆதரவு அதிகம் உண்டு. அதிமுகவின் ஆதரவு இருப்பது பெல்லார்மினுக்கு கூடுதல் பலம் கொடுக்கிறது.
பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷணன் கடந்த 1999ல் இத்தொகுதியில் வென்று மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்தார். இதனால் இவர் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். அமைச்சராக இருந்த போது தொகுதிக்கு ஓரளவு செய்திருப்பதால் இவரும் கணிசமான ஓட்டுக்களை பெறுவார் என எதிர்பார்க்கலாம்.
தேமுதிக வேட்பாளர் ஆஸ்டின் ஒரு முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்துள்ளார். ராஜ்ய சபை எம் பியாக இருந்திருப்பதால் தொகுதிக்கு நன்கு பரிச்சயமானவர்.
சமீபத்தில் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த சிவகாமிக்கும் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. இதையடுத்து கன்னியாகுமரி யார் வெற்றி பெறுவார் என்பதை மட்டுமல்ல யார் 2வது, 3வது இடங்களை பிடிப்பார்கள் என சொல்வது கூட கடினம் தான்.












Click it and Unblock the Notifications