தயாநிதி Vs எஸ்எஸ்.சந்திரன்: ப.சி Vs கண்ணப்பன்!!
சென்னை: திமுகவி்ன் தயாநிதி மாறனை எதிர்கொள்ள நடிகர் எஸ்எஸ் சந்திரனைப் போல களமிறக்கியுள்ளது அதிமுக.
திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் மிக பலமான வேட்பாளராகக் கருதப்படுகிறார். இந்தத் தொகுதியில் பெருவாரியாக உள்ள படித்தவர்கள், இளைஞர்கள் மத்தியில் தயாநிதிக்கு நல்ல பெயர் உண்டு.
மத்திய தொழிலநுட்பத்துறை அமைச்சராக நல்ல பெயர் வாங்கினார். இந் நிலையில் இவரை எதிர்கொள்ள படித்த இளைஞர் யாரையாவது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நிறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வெறும் 'டபுள் மீனிங்' பேச்சுக்கு மட்டுமே பெயர் பெற்ற (இவர் திமுகவில் இருந்தபோது அந்த மேடைகளிலும் ஜெயலலிதா உள்ளிட்டவர்களை அநாகரீகமாகப் பேசுவதை திமுக ஊக்குவித்தது. இதையும் குறிப்பிட்டாக வேண்டும்) இவரைப் போய் வேட்பாளராகப் போட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே அதிமுக ராஜ்யசபா எம்பியாகவும் இருந்தவர் ஆவார்.
ப.சிதம்பரத்துக்கு எதிராக கண்ணப்பன் சீட்:
அதே போல சிவகங்கையில் பலமிக்க காங்கிரஸ் வேட்பாளரான மத்திய உள்துறை அமைச்சரை எதிர்கொள்கிறார் சமீபத்தில் திமுகவில் இருந்து அதிமுகவுக்குத் தாவிய ராஜ கண்ணப்பன்.
சமீபத்தில் சிவகங்கையில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய கண்ணப்பன், யோவ் அழகிரி.. மதுரையோட உன் ஆட்டத்தை நிறுத்திக்கோ.. சிவகங்கையில வந்து ஆட்டம் போட்டு பார்.. உனக்கு நான் யார் என்று காட்டுகிறேன் என்று பேசினார்.
அப்போதே தெரிந்துவிட்டது கண்ணப்பனுக்கு சீட் நிச்சயம் என்பது.
அய்யரை அடித்த மணியனுக்கு சீட்:
மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் மணிசங்கர் அய்யர் போட்டியிடவுள்ள நிலையில் அங்கு ஓ.எஸ்.மணியனை களமிறக்கியுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு ஆங்கில பத்திரிக்கையில் எழுதியதற்காக மத்திய அமைச்சராக இருந்த அய்யரை மணியனும் அவரது ஆட்களும் காரில் விரட்டிச் சென்று நடுரோட்டில் விரட்டி விரட்டி அடித்தனர். இதற்காக மணியனுக்கு இந்தப் 'பரிசு' தரப்பட்டுள்ளது.
ரித்தீஷ் Vs சத்தியமூர்த்தி:
முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு ராமநாதபுரம் சீட் தரப்பட்டுள்ளது. இவர் அங்கு திமுகவின் நடிகர் ரித்தீஷ், பாஜகவின் திருநாவுக்கரசர் ஆகியோரை எதிர்த்து மோதவுள்ளார்.
சசியின் சாய்ஸ்..
தேனி தொகுதியில் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான தங்கத் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.
யாருக்குமே இல்ல..
திருப்பூர் தொகுதியை மதிமுகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேட்டு தொல்லை தந்துவந்த நிலையில் அதை இருவருக்குமே தராமல் தனது கட்சிக்கே ஒதுக்கிவிட்டார் ஜெயலலிதா.
இந்தத் தொகுதியில் சிவசாமியை களமிறக்கியுள்ளார்.