ரூ. 4 ஆயிரம் லஞ்சம்-டாஸ்மாக் பெண் மேலாளர் கைது!
கரூர்: கரூரில் டாஸ்மாக் ஊழியர் ஒருவரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அவருக்கு மீண்டும் பணியில் சேரும் உத்தரவை வழங்க ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் பெண் மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் அருகே உள்ள லாலாபேட்டை வல்லத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (34). இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். மனைவியின் பிரசவத்துக்காக கடந்த 19 , மற்றும் 20 -ம் தேதிகளி்ல் விடுப்பு எடுத்துக் கொண்டார்.
அப்போது அவர் வேலை பார்த்த டாஸ்மாக் கடைக்கு, மேலாளர் சகுந்தலா திடீர் சோதனை நடத்தினார். அப்போது வடிவேல் பணியில் இல்லை என்று கூறி அவரை சஸ்பெண்ட் செய்தார்.
இந்த நிலையில், ஊழியர் வடிவேல் டாஸ்மாக் மேலாளர் சகுந்தலாவை நேரில் சந்தித்து விளக்கம் கூறினார். ஆனால் இதை ஏற்றுக் கொள்ள டாஸ்மாக் மேலாளர் சகுந்தலா மறுத்து வி்ட்டார். மேலும் வடிவேல் பணியில் சேர வேண்டும் என்றால் ரூ 4000 தனக்கு லஞ்சம் தர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
இது குறித்து வடிவேல் திருச்சியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில் டாஸ்மாக் மேலாளரிடம் வடிவேல் லஞ்சப் பணம் ரூ 4 ஆயிரத்தை கொடுத்த போது சகுந்தலா மற்றும் மேற்பார்வையாளர் செல்வகுமார் ஆகியை இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.