தா.பாண்டியன் என்ன தாசில்தாரா?-திருமா
சென்னை: தா.பாண்டியன் மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. அவர் தாசில்தார் அல்ல. சாதி சான்றிதழ் தருவது போல வீர சான்றிதழ் தர வேண்டிய அவசியமில்லை. நாங்கள் புலிகள் என்பது மக்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாலர் தா.பாண்டியன் அளித்த ஒரு பேட்டியில், விடுதலை சிறுத்தைகள் எங்களுடன் இணைந்துதான் போராட்டம் நடத்தினர். ஆனால் இப்போது வழி மாறிப் போய் விட்டனர். சிறுத்தையாக இருந்த திருமாவளவன் இன்று சர்க்கஸ் புலியாகி விட்டார் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்கள் கேட்டதற்கு,
தா.பாண்டியன் மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. அவர் தாசில்தார் அல்ல. சாதி சான்றிதழ் தருவது போல வீர சான்றிதழ் தர வேண்டிய அவசியமில்லை. நாங்கள் புலிகள் என்பது மக்களுக்கு தெரியும் என்றார்.
முன்னதாக மெமோரியல் ஹால் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை திருமாவளவன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில், போரில் இறந்த விடுதலைப்புலிகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக உயிரிழந்தவர்களுக்கும் வீரவணக்க கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் இந்திய அரசே போரை நிறுத்து, இலங்கையில் கொல்லப்படும் தமிழ் மக்களை காப்பாற்று., இலங்கை அரசே ஈழத்தமிழ் இனத்தை அழிக்காதே, உலக நாடுகளே ஐ.நா சபையே இலங்கையில் அழிக்கப்பட்டு வரும் தமிழ் இனத்தை காப்பாற்று, இந்திய அரசே இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு துணை போகாதே என்று கோஷமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திருமா பேசுகையில், 2-ம் உலக போரின் போது தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள், விஷவாயு குண்டுகள் போன்ற மிக பயங்கரமான, அதிக சேதம் விளைவிக்கும் குண்டுகளை வீசி இலங்கை ராணுவம் ஈழதமிழ் மக்களை படுகொலை செய்து வருகிறது.
தமிழ் மக்களை பாதுகாப்பு வளையத்திற்குள் வாருங்கள், வளையத்திற்குள் வருபவர்களை நாங்கள் ஒன்றும் செய்யமாட்டோம் என்று கூறிவிட்டு அங்கு வருபவர்கள் மீது குண்டு வீசி மொத்தமாக கொன்று குவிக்கின்றனர்.
நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை கொன்று குவிப்பது நயவஞ்சகமான, கொடுமையான ஒன்றாகும். இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த 450 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் நம்பிக்கை துரோகத்தினால் பாதுகாப்பு வளையத்திற்குள் வருவதற்கு பயந்து சுமார் 31/2 லட்சம் தமிழர்கள் 24 கி.மீ பரப்பளவில் சிக்கி தவிக்கிறார்கள்.
நம் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமை இதுவரை வரலாற்றில் கூட நடந்தது இல்லை, இந்த கொடுமையை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. இந்திய அரசு மனிதநேய அடிப்படையில் சிங்கள அரசை எச்சரித்து தமிழர்கள் மீது அவர்கள் நடத்தும் கொலை வெறி போரை நிறுத்த செய்ய வேண்டும்.
நம் தொப்புள் கொடி உறவுகள் இலங்கை மண்ணில் தினம் தினம் ரத்தம் சிந்தி வருகிறது. அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications